Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM
தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பதால் இங்கிலாந்தில் இருந்து 900 ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்னைக்கு வந்தன.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று 2-வது அலை தீவிரமடைந்து வருகிறது. ஆக்சிஜன் வசதி கிடைக்காமல் பலர் உயிரிழந்து வருகின்றனர். தமிழகத்தில் தினமும் 400 டன் ஆக்சிஜன் உற்பத்தி இருந்தாலும், தேவை அதைவிட அதிகரித்துள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க, மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்தியாவுக்கு பல்வேறு நாடுகள் மருத்துவ உதவிகளை செய்து வருகின்றன.
இந்நிலையில், மத்திய அரசு ஏற்பாட்டின் பேரில், இங்கிலாந்தில் இருந்து எகிப்து வழியாக இந்திய விமானப் படையின் 2 விமானங்கள் மூலம் 900 ஆக்சிஜன் சிலிண்டர்கள் நேற்று சென்னைக்கு வந்தன. சுங்கத்துறை அதிகாரிகள் ஆக்சிஜன் சிலிண்டர்களை உடனடியாக வெளியே கொண்டு செல்வதற்கான சான்றிதழ்களை வழங்கினர்.
பின்னர், அதிகாரிகள் ஆக்சிஜன் சிலிண்டர்களை லாரிகளில் ஏற்றிச் சென்று கிடங்கில் வைத்தனர். தேவைப்படும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட உள்ளது.
இதேபோல், உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை சேமித்து வைக்க ஜெர்மனியில் இருந்து 4 கிரியோஜெனிக் ஆக்சிஜன் கன்டெய்னர்கள் சென்னைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆக்சிஜன் தட்டுப்பாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் தினமும் 400 டன் ஆக்சிஜன் உற்பத்தி இருந்தாலும், தேவை அதைவிட அதிகரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT