தேர்தல் செய்திகளை மக்கள் அறிந்துகொள்ள இணையதளம்: சென்னை மாநகராட்சி புதிய ஏற்பாடு

தேர்தல் செய்திகளை மக்கள் அறிந்துகொள்ள இணையதளம்: சென்னை மாநகராட்சி புதிய ஏற்பாடு
Updated on
1 min read

நாடாளுமன்ற தேர்தல் தொடர் பான செய்திகளை மக்கள் அறிந்து கொள்வதற்காக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அதிகாரியும், சென்னை மாநகராட்சி ஆணையருமான விக்ரம் கபூர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் சம்பந்தமான அனைத்து செய்திகளையும் மக்கள் அறிந்துகொள்ள ஏதுவாக சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் தேர்தலுக்கென ஒரு பிரத்யேக பகுதி (http://election.chennaicorporation.gov.in) உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பிரத்யேக இணைப்பு வாயிலாக வாக்காளர்கள் அனைவரும் தேர்தல் தொடர்பான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ளலாம். மேலும் வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக வாக்குப்பதிவை பதிவு செய்யும் பணிக்கு வர விரும்பும் மாணவர்கள் தங்கள் விவரங்களை சென்னை மாநகராட்சி இணையதளத்தில் தேர்தல் தகவல்களுக்கான பிரத்யேக பகுதி வாயிலாக பதிவு செய்யலாம்.

அல்லது பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பின், சென்னை மாநகராட்சியின் கணிப்பொறி மையத்தில் நேரடியாக ஒப்படைக்கலாம். தமிழக அரசு அளித்த இலவச மடிக்கணினிகளை இப்பணிக்காக பயன்படுத்த முடியாது என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in