Last Updated : 04 May, 2021 08:39 PM

 

Published : 04 May 2021 08:39 PM
Last Updated : 04 May 2021 08:39 PM

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளி தப்பியோட்டம்

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் தப்பியோடினார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 10,500ஐக் கடந்துவிட்டது. மாவட்டம் முழுவதும் 400க்கும் மேற்பட்ட இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, நோய்த் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 1,150 பேர் அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரசு மருத்துவமனைகளில் தங்கியுள்ளவர்களை விரைவாக குணப்படுத்த அரசு மருத்துவர்கள் தீவிர முயற்சிகள் எடுத்து வந்தாலும் உயிரிழப்புச் சம்பவம் தினசரி நிகழ்ந்து வருகிறது. மே 3-ம் தேதி நிலவரப்படி 152 பேர் உயிரிழந்துள்ளனர். நோய்த் தொற்று அதிகரித்து வந்தாலும் உயிரிழப்பு நிகழ்வுகளைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த மனநலம் பாதித்த ஒருவர் தப்பியோடிய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன் விவரம்:

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர் கடந்த 28-ம் தேதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நேற்று (மே 3ஆம் தேதி) அவர் தப்பியோடினார். இதுகுறித்துக் கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் காவல் துறையினருடன், சுகாதாரத்துறையினர், உள்ளாட்சி அமைப்பினர் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி, மண்டலவாடி அருகே அந்த இளைஞர் சுற்றித்திரிவதாக வந்த தகவலின் பேரில், ஜோலார்பேட்டை அரசு மருத்துவர் புகழேந்தி, சுகாதார ஆய்வாளர் கோபி, பொன்னேரி ஊராட்சி செயலாளர் சின்னதம்பி, சின்னவேப்பம்பட்டு ஊராட்சி செயலாளர் சுதாகர் மற்றும் காவல்துறையினர் மண்டலவாடிக்கு விரைந்து சென்று அங்கு பதுங்கியிருந்த கரோனா நோயாளியைப் பிடித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார்.

தப்பியோடிய மனநலம் வடமாநிலம் இளைஞர் எங்கெல்லாம் சென்றார்? அதன் மூலம் யாருக்காவது நோய்ப் பரவல் ஏற்பட்டதா? என்பது குறித்தும் சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகளைக் கண்காணிக்க நகர காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர் தலைமையில் 4 காவலர்கள் அரசு மருத்துவமனையில் இன்று முதல் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x