Last Updated : 04 May, 2021 05:35 PM

 

Published : 04 May 2021 05:35 PM
Last Updated : 04 May 2021 05:35 PM

வாட்ஸ் அப் குழு அமைத்து அன்னதானக் கோயில்களைத் தேடிச் சென்று உணவருந்தும் கறம்பக்குடி இளைஞர்கள்

கறம்பக்குடி அருகே ஒரு கோயிலில் நடைபெற்ற அன்னதானத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வாட்ஸ் அப் குழு அமைத்து அன்னதானக் கோயில்களைத் தேடிச் சென்று இளைஞர்கள் உணவருந்தி வருகின்றனர்.

ஆடி, சித்திரை போன்ற மாதங்களில் அதிகமான கோயில்களில் திருவிழா நடத்தப்படும். தற்போது கரோனா பரவலினால் கோயில்களில் திருவிழாக்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், சில கோயில்களில் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் கலந்துகொள்ளும் விழா நடத்தப்பட்டு வருகிறது

சில கோயில்களில் ஆடு, கோழிகளை பலியிட்டு பூஜை நடத்தி, அன்னதானம் செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்ற இடங்களைத் தெரிந்துகொண்டு, உணவருந்துவதற்காக கறம்பக்குடி பகுதயில் 'பூஜை சோறு தகவல் மையம்' எனும் வாட்ஸ் அப் குரூப்பை இளைஞர்கள் தொடங்கி, செயல்படுத்தி வருகின்றனர்.

இந்த குரூப்பில் அன்னதானம் நடக்கும் இடமும், நேரமும் பதிவிடப்படுகிறது. அதைப் பின்பற்றி இளைஞர்கள் சென்று உணவருந்தி மகிழ்கின்றனர்.

இதுகுறித்து வாட்ஸ் அப் குரூப்பைச் சேர்ந்த கறம்பக்குடி எஸ்.சின்னதுரை கூறுகையில், "பொதுவாக ஆடி, சித்திரை மாதங்களில் கோயில்களில் திருவிழா, பூஜை நடத்தப்படும். அப்போது, ஆடு, கோழிகளை பலியிட்டு அன்னதானம் செய்யப்படும். சில கோயில்களில் சைவமாகவும் அன்னதானம் செய்யப்படும்.

இதுபோன்ற அன்னதானங்களில் கலந்துகொள்வதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி, கந்தர்வக்கோட்டை பகுதிகளிலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி போன்ற பகுதிகளில் இருந்தும் இளைஞர்கள் சுமார் 220 பேரைக் கொண்டு 'பூஜை சோறு தகவல் மையம்' எனும் வாட்ஸ் அப் குரூப் 2019இல் ஆடி மாதத்தில் உருவாக்கப்பட்டது.

அந்த ஆண்டில் அதிகமான கோயில்களுக்குச் சென்று உணவருந்தினோம். மறுஆண்டில் கரோனா பரவலினால் அவ்வளவாக திருவிழா நடைபெறவில்லை. எனினும், ஓரிரு இடங்களில் மட்டும் நடத்தப்பட்டது.

தற்போது கடும் கட்டுப்பாடுகளுக்கு இடையே சில இடங்களில், அதாவது காட்டுப்பகுதியில் உள்ள முனி, அய்யனார் போன்ற கோயில்களில் பூஜை நடத்தி, அன்னதானம் செய்யப்படுகிறது. இதுபோன்று அன்னதானம் நடக்கும் இடங்களைப் பற்றி உரிய தகவல்கள் பகிரப்படும். அதைப் பின்பற்றி, அங்கு சென்றுவிடுவோம்.

அதிகபட்சம், 40 கிலோ மீட்டர்வரைகூட இருசக்கர வாகனங்களில் சென்றிருக்கிறோம். நடுசாமத்தில் அன்னதானம் செய்தாலும் தவறவிடுவதில்லை. சைவ அன்னதானத்துக்கு ஓரிருவரே செல்வர்.

அசைவமாக இருந்தால் அதிகமானோர் செல்வோம். படித்த நட்பு வட்டத்தின் அடிப்படையில் இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து சந்தோஷத்துக்காக இதைச் செய்து வருகிறோம். ஸ்டார் ஹோட்டலில் இல்லாத ருசி கோயில் அன்னதானத்தில் கிடைப்பதாக உணர்கிறோம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x