

பொதுநல வழக்கு தொடர்வதற் கும் ஒரு வரைமுறை இருக்கிறது. எதற்கெடுத்தாலும் பொதுநல வழக்கு தொடரும் மனப்பக்கு வத்தை கைவிடுங்கள் என்று வழக்கறிஞர்களுக்கு தலைமை நீதிபதி அறிவுரை வழங்கினார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்யநாராயணா ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு நேற்று வழக்குகளை விசா ரிக்கத் தொடங்கியது. அப்போது ஜார்ஜ் வில்லியம்ஸ் என்ற வழக்கறிஞர் ஆஜராகி, “தாம்பரம் அருகே மாநகர பஸ் படிக்கட்டு கூண்டோடு உடைந்து விழுந்ததால், அதில் பயணம் செய்த 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பாக உயர் நீதிமன்றம் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என முறையிட்டார். அதையடுத்து நீதிபதிகள் அவரிடம் பொதுநல வழக்கு தொடருங்கள் என்றனர்.
அப்போது குறுக்கிட்ட மற்றொரு வழக்கறிஞரான விஜய், “ஏற்கெனவே அனைத்து அரசு பஸ்களிலும் கதவு அமைக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு 2013-ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் உயர்நீதிமன்றமும் ஒரு கமிட்டியை அமைத்துள்ளது. அப்படியிருந்தும் மாநகர போக்கு வரத்துக் கழகம் பயணிகளின் பாதுகாப்புக்கு எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. வழக்கும் கிடப்பில் கிடக்கிறது. எனவே அந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும்” என்றார்.
இதனால் கோபமடைந்த தலைமை நீதிபதி, “நீங்கள் நாளிதழ்களைப் படித்து விட்டு இங்கு வந்து முறையிடுகிறீர்கள். எல்லா விஷயங்களுக்காகவும் நீங்கள் உயர்நீதிமன்றத்தின் கதவுகளை தட்டக்கூடாது. பஸ்களில் சேதம் இருந்தால் மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ-க்கள் அல்லது எம்.பி-க்களிடம் சென்று முறையிடுங்கள்” என்றார்.
மீண்டும் குறுக்கிட்ட வழக்கறி ஞர் விஜய், மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்காததால்தான் உயர் நீதிமன்றத்தை நாடுகிறோம், என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், “பொதுநல வழக்கு தொடர் வதற்கும் ஒரு வரைமுறை இருக்கிறது. எதற்கெடுத்தாலும் பொதுநல வழக்கு என்ற மனப்பக்குவத்தை கைவிடுங்கள். எல்லா பிரச்சனைகளுக்கும் பொதுநல வழக்கு தொடர்ந்தால், அது உயர்நீதிமன்றத்தின் நிர்வாகப்பணியை பாதிக்கும். கற்றறிந்த வழக்கறிஞர்களாகிய நீங்கள் மக்கள் பிரதிநிதிகளிடம் முறையிடுங்கள்” என அறிவுரை வழங்கினர்.