Published : 04 May 2021 02:35 PM
Last Updated : 04 May 2021 02:35 PM

அம்மா உணவகம் சூறை; டிடிவி, ஜெயக்குமார் கண்டனம்: உடனடி நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் உத்தரவு

மதுரவாயலில் அம்மா உணவகத்தைச் சூறையாடி பெயர்ப் பலகையை அகற்றிய திமுகவினர் குறித்த தகவல் வெளியானதை அடுத்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கண்டித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்டாலின் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், கட்சியிலிருந்து நீக்கியும் உத்தரவிட்டுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தில் நல்லாட்சியை அளிப்போம் என்று திமுக பிரச்சாரம் செய்தது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சாரத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடியிசம் பெருகும் எனப் பிரச்சாரம் செய்தார். இது சமூக வலைதளக் காலம். சிறிய தவறு செய்தாலும் யாராவது ஒருவர் அவரது செல்போனில் வீடியோ எடுத்துப் போட்டால் விஷயம் காட்டுத் தீயாகப் பரவிவிடும். இதை அனைவரும் அறிந்திருந்தாலும் குழு மனப்பான்மையில் வன்முறையைக் கையிலெடுப்பவர்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். கட்சித் தலைமைக்கும் கெட்ட பெயர் வருகிறது.

இன்று முகப்பேர் பகுதியில் திமுக சார்பில் நடந்த வெற்றி அறிவிப்புக் கூட்டத்தில் திடீரென திமுகவினர் சிலர் அருகில் அம்மா உணவகத்தில் புகுந்து சூறையாடினர். பெயர்ப் பலகையை உடைத்தும், கிழித்தும் எறிந்தனர். இதை சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பினர். இதற்குக் கண்டனமும் எழுந்தது.

இதுகுறித்து ட்விட்டரில் தனது கண்டனத்தை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார். “முகப்பேரில் உள்ள அம்மா உணவகத்தைத் திமுகவினர் அடித்து நொறுக்கி சூறையாடியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஜெயலலிதாவின் பெயர் இருக்கிறது என்பதற்காகவே ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் உணவகத்தில் திமுகவினர் இப்படி நடந்துகொள்வது வேதனையளிக்கிறது.

ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே அராஜகத்தை ஆரம்பித்துவிட்ட திமுகவினர் அடுத்தடுத்து என்ன செய்யப் போகிறார்களோ? என்கிற கவலை இந்தக் காணொலியைக் காணும்போது ஏற்படுகிறது. திமுகவினர் ஒருபோதும் திருந்தவே மாட்டார்கள் என்பதற்குச் சாட்சியாக இந்தச் சம்பவம் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.

அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமாரும் இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ளார்.

இதுகுறித்து உடனடியாக திமுக தலைமையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக திமுகவினர் அங்கு பெயர்த்த பெயர்ப் பலகையை மீண்டும் அடித்துவைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு, பகுதிச் செயலாளர் தலைமையில் அந்தப் பணி நடைபெற்றது.

இதுகுறித்து பேட்டி அளித்த திமுக மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

''அம்மா உணவகம் பெயர்ப் பலகைகளைப் பிரித்தெடுத்து அம்மா உணவகத்தில் பிரச்சினை செய்த விவகாரம் திமுக தலைவர் கவனத்திற்குச் சென்றது. தவறான செயலில் ஈடுபட்ட சுரேந்திரன், தவசுந்தர் ஆகிய இருவரும் திமுகவில் எந்தப் பொறுப்பிலும் இல்லாதவர்கள். அவர்கள் சுவரில் இருந்து பெயர்த்தெடுத்த பெயர்ப் பலகையை அதே இடத்தில் ஒட்டச் சொன்னோம்.

அதேபோல் சட்ட நடவடிக்கை எடுக்க தலைவர் உத்தரவிட்டதன் அடிப்படையில் இருவர் மீதும் திமுக சார்பில் பகுதிச் செயலாளர் நொளம்பூர் ராஜன் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் இருவரையும் கைது செய்து அவர்கள் மீது 294 (பி), 427, 448 ஆகிய ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் கட்சிப் பொறுப்புகளில் இல்லாவிட்டாலும் கட்சியிலிருந்து நீக்க தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அந்தச் செய்தியும் நாளை முரசொலியில் வெளிவரும்.

இந்த நிலையில் ஒரு சிலர், திமுகவினர் வன்முறையைத் தொடங்கி விட்டார்கள் என்று சொல்லத் தொடங்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைச் சொல்லிக் கொள்கிறேன். இதுவே ஆட்சிக்கு வரும்முன் தலைவர் எவ்வகையில் செயல்படுகிறார் என்பதைக் காட்டுகிறது''.

இவ்வாறு மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x