

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளார் என்றும் அவரது உடல் நிலை தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தேமுதிக தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேமுதிக தலைமைக் கழகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
உடல் நிலை சரியில்லாததால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார் என்ற வதந்தி காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதில் துளியும் உண்மையில்லை. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்துக்கும் சாலைவழியே காரில் சென்ற விஜயகாந்த், மழை வெள்ளப் பகுதிகளில் சுகாதார முன்னேற்பாடுகள் இல்லாமல், காலுறை, கையுறை இன்றி மக்களோடு மக்களாக கலந்து நிவாரண உதவிகளை வழங்கினார்.
சமீபத்தில் தூத்துக்குடி மாவட்ட சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு கடலூர் திரும்பியபோது விஜயகாந்துக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டது. ஆகையால், அன்றிரவு பெரம்பலூரில் தங்கினார். எனினும், திட்டமிட்டபடி அவர் கடலூர் சென்றார்.
பல மாவட்டங்களிலிருந்து தொண்டர்கள் அனுப்பும் நிவாரணப் பொருட்களை சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து தனது நேரடி கண்காணிப்பில் பாதிக்கப்பட்டோருக்கு விஜய காந்த் அனுப்பி வருகிறார். உடல்நிலையில் எந்த பாதிப்புமின்றி அவர் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார். எனவே, வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.