Published : 20 Dec 2015 10:11 AM
Last Updated : 20 Dec 2015 10:11 AM
முதல்வர் ஜெயலலிதாவை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று சந்தித்துப் பேசுகிறார்.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுத்துறை வங்கிகளின் மாநில அளவிலான வங்கியாளர் குழு மூலம் கடன் வழங்கும் நிகழ்ச்சி, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இமேஜ் ஆடிட்டோரியத்தில் இன்று நடக்கிறது. இதில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இதற்காக அருண் ஜேட்லி நேற்றிரவு சென்னை வந்தார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவரை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை 9 மணிக்கு நடக்கிறது. இந்நிகழ்ச்சி முடிந்ததும் காலை 11.45 மணிக்கு முதல்வர் ஜெயலலிதாவை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் அருண் ஜேட்லி சந்தித்துப் பேசுகிறார். இந்தச் சந்திப்பின்போது ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அதிமுகவின் ஆதரவை கோருவார் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனவரி 18-ம் தேதி ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் அருண் ஜேட்லி சந்தித்துப் பேசினார். ஆகஸ்ட் 7-ம் தேதி சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்னை வந்த மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, கடந்த 13-ம் தேதி தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், இன்று சென்னை வரும் அருண் ஜேட்லி முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT