Last Updated : 04 May, 2021 03:13 AM

 

Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் இல்லாத கோவை மாவட்டம்: வளர்ச்சித் திட்டப் பணிகள் தடையின்றி தொடருமா?

கோவை

தமிழகத்தில் திமுக ஆளும் கட்சியாக வெற்றி பெற்றும், கோவையில் திமுகவுக்கு ஒரு சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழகத்தில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க உள்ளார். ஆனால் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் ஒன்றில் கூட திமுக வெற்றிபெறவில்லை. ஆளும் கட்சி உறுப்பினர்கள் இல்லாததால், இங்கு அமைச்சராக யாரையும் நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய அரசு அமையும்போது, அமைச்சரவையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படுவது வழக்கம். அந்த அமைச்சர் மாவட்டத்துக்கு கண்காணிப்பு அதிகாரி போல செயல்படுவார். ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் அடிக்கடி ஆலோசனைக் கூட்டம் நடத்தி, மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டப் பணிகளின் நிலை குறித்து விசாரித்து, பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுப்பார். புதிய திட்டப் பணிகளை தொடங்கிவைப்பார். தொழில்துறை உள்ளிட்ட பல்துறையைச் சேர்ந்தவர்களின் கோரிக்கையை அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்வார்.

கரோனா தொற்று பரவல் காலத்தில், நோய் தடுப்புப் பணிகளை முடுக்கிவிடுவதில், மாவட்டத்தில் உள்ள அமைச்சர்களின் பங்கு முக்கியமானதாக இருந்தது.

கோவையில் மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்போடு ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் குளக் கரைகள் மேம்பாடு உள்ளிட்ட பணிகளும், தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பில், மேம்பாலங்கள் கட்டுதல், பில்லூர் 3-ம் குடிநீர் திட்டப் பணி, 24 மணி குடிநீர் திட்டப் பணி, திடக்கழிவு மேலாண்மைப் பணி உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத் திட்டப்பணிகளில் ஊழல்கள் நடந்துள்ளதாகவும், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனவும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கோவையில் பணிகளை முறையாக கண்காணிக்க அமைச்சர் இல்லாததாலும், திமுகவினர் கூறிய ஊழல் குற்றச்சாட்டுகளாலும், அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டப் பணிகள் தடையின்றி தொடர்ந்து மேற்கொள்ளப்படுமா? புதிய வளர்ச்சிப் பணிகளும் தடையின்றி நடக்குமா? என கேள்வி எழுந்துள்ளது. அதேநேரம், மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அமைச்சர் அந்தஸ்தில் வாரியத் தலைவர் போன்ற முக்கிய அரசுப் பதவியில் நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x