தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் மறுதேர்தல்: இரு தரப்பும் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு  

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் மறுதேர்தல்: இரு தரப்பும் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு  
Updated on
1 min read

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு மறுதேர்தல் நடத்த சம்மதமா என இரு தரப்பும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், நிர்வாகிகள் பதவி வகிக்கத் தடை விதித்த தனி நீதிபதியின் உத்தரவிற்கும் தடை விதித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு நடந்த தேர்தலில், துணைத் தலைவராக எஸ்.கதிரேசன், கவுரவச் செயலாளராக ஆர்.ராதாகிருஷ்ணன், பொருளாளராக எஸ்.சந்திரபிரகாஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

கவுன்சில் விதிகளின்படி, தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு நேரடியாக தமிழ்த் திரைப்படங்களைத் தயாரிக்காத மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் அவர்கள் பதவி வகிக்கத் தடை விதிக்கக் கோரி திரைப்படத் தயாரிப்பாளர்கள் கே.ராஜன், பி.டி.செல்வகுமார், என்.சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பொங்கியப்பன், நிர்வாகிகளாக மூவரும் பதவி வகிக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து, நிர்வாகிகளாகத் தேர்வான மூவரும் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.என்.மஞ்சுளா அமர்வு விசாரித்தது. அப்போது, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் மறுதேர்தலை நடத்த இரு தரப்பினருக்கும் சம்மதமா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இருதரப்பும் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.

அதுவரை, நிர்வாகிகளாக கதிரேசன், ராதாகிருஷ்ணன், சந்திரபிரகாஷ் ஆகியோர் பதவி வகிக்க தனி நீதிபதி பிறப்பித்த தடை உத்தரவிற்குத் தடை விதித்தும் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in