Published : 03 May 2021 07:59 PM
Last Updated : 03 May 2021 07:59 PM

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ராஜினாமா: வழக்கறிஞர்கள் குழுவும் கூண்டோடு ராஜினாமா

விஜய் நாராயணன், சோமையாஜி

சென்னை

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், தனது பதவியை வாக்கு எண்ணிக்கைக்கு முன்னரே ராஜினாமா செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் குழு கூண்டோடு ராஜினாமா செய்து வருகிறது.

2016ஆம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்த பிறகு மூத்த வழக்கறிஞர் ஆர்.முத்துகுமாரசாமி தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது சொந்தக் காரணங்களுக்காக அவர் ராஜினாமா செய்தார்.

அதன்பின் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதியில் நியமிக்கப்பட்டார். இவர், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு, ஸ்டெர்லைட் ஆலையை மூடிய உத்தரவை எதிர்த்த வழக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்த வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் அரசுக்கு ஆதரவாக ஆஜரானார்.

இந்நிலையில், தற்போது நடந்த தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சி அமையவுள்ள நிலையில், தனது பதவியை விஜய் நாராயணன் ராஜினாமா செய்திருக்கிறார். இதற்கான கடிதத்தை தமிழக முதல்வருக்கு நேற்றே அனுப்பி வைத்துள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தில், தன்னை நியமித்து முழு ஒத்துழைப்பு அளித்த தமிழக முதல்வர், சட்ட அமைச்சர், அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை முதல், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், அரசு சிறப்பு மூத்த வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் பி.எச்.அரவிந்த் பாண்டியன், வி.எஸ் சேதுராமன், எஸ்.டி.எஸ் மூர்த்தி, அ.குமார், நர்மதா சம்பத், அரசு பிளீடர் வி.ஜெயப்பிரகாஷ் நாராயணன், சிறப்பு வழக்கறிஞர்கள் கார்த்திகேயன், முனுசாமி, சண்முகசுந்தரம் உள்ளிட்ட பல அரசு வழக்கறிஞர்கள் ஒவ்வொருவராகத் தங்கள் பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை அனுப்பி வருகிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x