Last Updated : 03 May, 2021 01:52 PM

 

Published : 03 May 2021 01:52 PM
Last Updated : 03 May 2021 01:52 PM

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி: என்.ரங்கசாமி முதல்வராகப் பதவி ஏற்கிறார்

புதுச்சேரி 

புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி 16 இடங்களைப் பெற்ற நிலையில், என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என். ரங்கசாமி வரும் 7 அல்லது 9 ஆம் தேதி முதல்வராகப் பதவி ஏற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. புதுச்சேரியில் ஆட்சி அமைக்க 16 இடங்கள் தேவை. என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதன் கூட்டணியில் போட்டியிட்ட அதிமுக 5 இடங்களிலும் தோல்வியைத் தழுவியிருக்கிறது.

எதிரணியில் 14 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 2 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான திமுக 6 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது. இந்தக் கூட்டணியில் தலா ஒரு தொகுதியில் போட்டியிட்ட விசிக மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் தோல்வியைத் தழுவியிருக்கின்றன.

யாரும் எதிர்பாராத வகையில் இம்முறை காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்களை வீழ்த்தி 6 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர். முன்னாள் முதல்வர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் ஏனாம் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். தட்டாஞ்சாவடி தொகுதியில் வெற்றி பெற்ற ரங்கசாமி, ஏனாம் தொகுதியில் தோல்வியடைந்தார்.

என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், பாஜக ஆதரவுடன்தான் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியும். எனவே என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் புதுச்சேரி பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் நிர்மல்குமார் சுரானா, ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. ஆகியோர் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை திலாசுப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று (மே.3) நேரில் சந்தித்து வாழ்த்து கூறினர். தொடர்ந்து ரங்கசாமியுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு முதல்வர் பதவி அளிப்பது தொடர்பாகவும், பாஜக அமைச்சரவையில் இடம்பெறுவது தொடர்பாகவும் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் நிர்மல்குமார் சுரானா செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர் ரங்கசாமியைச் சந்தித்து வாழ்த்து கூறினோம். ஓரிரு நாட்களில் ஆட்சி அமைக்க முடிவு செய்யப்படும். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் பாஜக பங்கு பெறும்’’ என்றார்.

என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி கூறும்போது, ‘‘மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறிவிட்டுச் சென்றார்.

இதனிடையே புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அமையும் பட்சத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி முதல்வராகப் பதவி ஏற்பார் எனத் தெரிகிறது. இதன்படி மே 7 அல்லது 9 ஆம் தேதிகளில் முறைப்படி முதல்வராக ரங்கசாமி பதவி ஏற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x