Last Updated : 03 May, 2021 12:44 PM

 

Published : 03 May 2021 12:44 PM
Last Updated : 03 May 2021 12:44 PM

அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்துக்கு அமைச்சர் பதவி; எதிர்பார்ப்பில் இரு மாவட்ட மக்கள்

எஸ்.எஸ்.சிவசங்கர்: கோப்புப்படம்

அரியலூர்

மிகவும் பின்தங்கிய மாவட்டமான அரியலூர், பெரம்பலூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் இரு மாவட்ட மக்கள் உள்ளனர்.

திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த வந்த அரியலூரை பெரம்பலூர் மாவட்டமாக 1995-ம் ஆண்டு அரசு அறிவித்தது. அதன் பின்னர், 2000-ம் ஆண்டு ஆட்சியிலிருந்த திமுக, அரியலூரை புதிய மாவட்டமாக அறிவித்தது.

பின்னர் 2002-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, அரியலூர் மாவட்டத்தை ரத்து செய்து, மீண்டும் ஒருங்கிணைந்த பெரம்பலூர் மாவட்டமாக அறிவித்தது. பின்னர், 2007-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக தலைவர் மு.கருணாநிதி, மீண்டும் அரியலூரை தனி மாவட்டமாக பிரித்து, ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்களை கொண்டு வந்தார்.

அதன் பின்னர், கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி செய்த வந்த நிலையில், கடந்த 2016-ல் அரியலூர் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட தாமரை எஸ்.ராஜேந்திரனுக்கு, அரசு தலைமைக் கொறடா பதவியை அப்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா வழங்கினார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மாற்றம் என்பதை செய்யவில்லை. ஜெயலலிதா இருந்திருந்தால் அடிக்கடி அமைச்சர்கள் மாற்றம், மாவட்ட செயலாளர்கள் மாற்றம் என, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பார் என்பது அனைவரும் அறிந்த விசயம்.

எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மாற்றம் ஏதும் செய்யாததால், கடந்த 5 ஆண்டுகளாக அரியலூர் எம்எல்ஏவாக இருந்த ராஜேந்திரன், தொடர்ந்து அரசு கொறடாவாக பதவி வகித்தார். இதன் காரணமாக, அரியலூருக்கு மருத்துவக்கல்லூரியுடன் கூடிய மருத்துவமனையை கொண்டு வந்தார் ராஜேந்திரன். ராஜேந்திரனுக்கு அரசு தலைமைக் கொறடா பதவி இருந்ததால் தான் அரியலூர் மாவட்டம் ஓரளவுக்கு வளர்ச்சி அடைந்தது என்றும் கூறலாம்.

தற்போது, நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர், குன்னம் ஆகிய நான்கு தொகுதிகளையும் அதிமுக வசமிருந்து திமுக கைப்பற்றியுள்ளது.

இந்த நான்கு தொகுதிகளும் உள்ள மாவட்டங்கள் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது. பெரம்பலூரில் வெற்றிபெற்ற ஆ.ராசா, அமைச்சராக பதவி ஏற்றபின்பு தான் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள் ஓரளவுக்கு முன்னேற்றத்தை அடைந்தது. இளைஞர்களுக்கு வேலை, கிராமங்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர், அரியலூரில் பொறியியல் கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையம் என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார்.

ஆ.ராசா நீலகிரி தொகுதிக்கு சென்ற பின்பு, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள் வளர்ச்சி பாதைக்கு செல்லவில்லை என்றே சொல்லலாம். அமைச்சர்கள் உள்ள மாவட்டங்களே வளர்ச்சி அடைகிறது என்பது மக்களின் கருத்தாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

அந்த வகையில் தொடர்ந்து 4 முறை எம்எல்ஏ பதவிக்கு போட்டியிட்டு 3 முறை வெற்றி பெற்றுள்ள குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ எஸ்.எஸ்.சிவசங்கருக்கு இந்த முறை அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருமாவட்ட மக்களும் உள்ளனர்.

குன்னம் தொகுதி பெரம்பலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியையும், அரியலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியையும் கொண்டுள்ளது. இதனால் குன்னம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள வேட்பாளருக்கு அமைச்சர் பதவியை வழங்கினால், இருமாவட்ட மக்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழிற்சாலைகள், மாணவர்களுக்கு கல்வி நிலையங்கள் கூடுதலாக கிடைக்கும்.

அரியலூரில் நடைபெற்று வரும் மருத்துவக் கல்லூரியின் பணிகள் முழுமையாக நிறைவடைந்து, போதிய மருத்துவர்கள், மருத்துவ உபகரணங்கள் கிடைக்க பெறும். அரியலூர் மாவட்டத்தில் சிமென்ட் தொழிற்சாலைகளால் அடிக்கடி ஏற்படும் சாலை விபத்துக்களை தடுக்க சிமென்ட் ஆலைகளுக்கு இயக்கப்படும் வாகனங்கள் செல்ல தனிச்சாலைகள் என பல்வேறு வசதிகளும் அமைச்சர் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும் என்பது மக்களின் எதிா்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x