Published : 03 May 2021 05:11 AM
Last Updated : 03 May 2021 05:11 AM

15 ஆண்டுகளுக்கு பிறகு பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள்

சென்னை

தமிழக சட்டப்பேரவையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக எம்எல்ஏக்கள் இடம் பெறு கின்றனர்.

நாடு முழுவதும் பலமிக்க கட்சியாக இருந்தாலும் தமிழகம், ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் பாஜகவால் ஒருசில தொகுதிகளில்கூட வெல்ல முடியவில்லை. 1996 பேரவைத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபுரம் தொகுதியில் பாஜக சார்பில்போட்டியிட்ட சி.வேலாயுதன் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் அடியெடுத்து வைத்தார். தமிழகத்தில் பாஜகவின் முதல் எம்எல்ஏ அவர்தான்.

2001 பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 21 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, மயிலாப்பூர், காரைக்குடி, மயிலாடுதுறை, தளி ஆகிய 4 தொகுதிகளில் வென்றது. அதன்பிறகு நடைபெற்ற 2006, 2011, 2016 ஆகிய 3 தேர்தல்களில் பாஜகவுக்கு ஓரிடம்கூட கிடைக்கவில்லை.

இந்நிலையில், நடந்து முடிந்துள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிட்ட பாஜக கோவை தெற்கு, நாகர்கோவில், திருநெல்வேலி, மொடக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளில் வென்றுள்ளது.

பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன், கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை தோற்கடித்தார். நாகர்கோவில் தொகுதியில் பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி, திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனை வீழ்த்தினார். திருநெல்வேலியில் முன்னாள் அமைச்சரும், பாஜக மாநில துணைத் தலைவருமான நயினார் நாகேந்திரன் வெற்றி பெற்றுள்ளார்.

மொடக்குறிச்சியில் பாஜக வேட்பாளர் சரஸ்வதி வெற்றி பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x