Published : 02 May 2021 09:28 PM
Last Updated : 02 May 2021 09:28 PM

தாராபுரத்தில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்; துணை ஆணையர் பேச்சுவார்த்தை 

தாராபுரம் வாக்கு எண்ணும் மையத்தில் இறுதிச் சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு வந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

தாராபுரம் (தனி) தொகுதியில் பாஜகவின் மாநிலத் தலைவர் எல்.முருகன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுகவில் கயல்விழி செல்வராஜ், அமமுகவில் கலாராணி, நாம் தமிழர் கட்சியில் ரஞ்சிதா, மக்கள் நீதி மய்யத்தில் சார்லி ஆகியோர் உட்பட 14 பேர் போட்டியிட்டனர்.

இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் ஆரம்பம் முதலே பாஜகவின் மாநிலத் தலைவர் எல்.முருகன் முன்னிலை வகித்து வந்தார். இந்நிலையில் 14-வது சுற்றில் எல்.முருகன் திடீரெனப் பின்னடைவைச் சந்தித்தார். தொடர்ந்து திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் முன்னிலை வகித்து வருகிறார்.

இதற்கிடையே தாராபுரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இறுதிச் சுற்று ( 25-வது சுற்று) வாக்குகள் எண்ணப்பட்டு வந்த நிலையில், கடைசிச் சுற்றில் விவிபாட் இயந்திரம் பழுதானது. அப்போது திடீரென டிஎஸ்பி ரமேஷ் பாபு, அங்கிருந்த செய்தியாளர்களை வெளியேறச் சொன்னதால் சர்ச்சை ஏற்பட்டது. எனினும் மீண்டும் பேசிய செய்தியாளர்கள், உள்ளேயே இருப்போம் என்று கூறியதால் மீண்டும் அனுமதிக்கப்பட்டனர். விவிபாட் இயந்திரம் பழுதானதால் அது சரிசெய்யப்பட்டு வந்தது.

திடீரென தபால் வாக்குகளில் முறைகேடுகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறி பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வாக்கு எண்ணும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே துணை ஆணையர் பாஜகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதனால் வெற்றி யாருக்கு என்ற அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலவர அடிப்படையில், கயல்விழி செல்வராஜ் 85,513 வாக்குகளைப் பெற்றுள்ளார். எல்.முருகன் 84,905 வாக்குகளோடு இரண்டாவது இடத்தில் உள்ளார். இருவருக்கும் 608 வாக்குகள் வித்தியாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x