Published : 02 May 2021 09:12 PM
Last Updated : 02 May 2021 09:12 PM

உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருந்து கடமையாற்றுவேன்: உதயநிதி ஸ்டாலின் உறுதி

சென்னை

உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருந்து கடமையாற்றுவேன் என்று சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று திமுக பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. இன்னும் பல்வேறு தொகுதிகளின் இறுதி நிலவரம் வெளியாக வேண்டியுள்ளது.

இந்தத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்டார் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின். சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட அவர், சுமார் 65,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். தனது வெற்றிக்கான சான்றிதழுடன் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.

சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றிருப்பது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும், எனக்காகத் தேர்தல் பணிகளை மேற்கொண்ட அண்ணன் தயாநிதி மாறனுக்கும், மாவட்டப் பொறுப்பாளர் சிற்றரசு, பகுதிச் செயலாளர்கள் உள்ளிட்ட கழகத்தினருக்கும் நன்றி.

முதல் முறையாகத் தேர்தலில் போட்டியிட்ட என் மீது நம்பிக்கை வைத்து, 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியைத் தேடித் தந்த உங்களுக்காக உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருந்து கடமையாற்றுவேன் என என் தொகுதி மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

இணைந்து பயணிப்போம்; முன்மாதிரி தொகுதியாக்குவோம். வங்கக் கடலோரம் தன் அண்ணனுக்குப் பக்கத்தில் துயில் கொள்ளும் முத்தமிழறிஞருக்கு இந்த வெற்றியைச் சமர்ப்பிக்கிறேன்".

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x