Published : 02 May 2021 04:13 PM
Last Updated : 02 May 2021 04:13 PM

நீலகிரியில் காலையில் அதிமுக; பிற்பகலில் திமுகவுக்குச் சாதகமான தேர்தல் முடிவுகள்

பொன்.ஜெயசீலன்

உதகை

நீலகிரி மாவட்டத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி உதகையில் காங்கிரஸ், குன்னூரில் திமுக, கூடலூரில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளன.

நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. காலையில் அதிமுக கூட்டணிக்குச் சாதகமாக இருந்த மூன்று தொகுதிகளும், மதியம் மேல் திமுக கூட்டணிக்குச் சாதகமாக அமைந்தன.

உதகையில் பாஜகவைப் பின்னுக்குத் தள்ளி காங்கிரஸும், குன்னூரில் அதிமுகவைப் பின்னுக்குத் தள்ளி திமுகவும் முன்னிலை பெற்றுள்ளன.

உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் 17-ம் சுற்றின் இறுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.கணேஷ் 50,736 வாக்குகளும், பாஜக வேட்பாளர் மு.போஜராஜன் 45,172 வாக்குகளும் பெற்றனர். கணேஷ் 5,564 வாக்குகள் முன்னிலை பெற்றார். இந்நிலையில், 4 சுற்றுகள் மற்றும் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

குன்னூரில் 20-வது சுற்றின் இறுதியில் திமுக வேட்பாளர் க.ராமசந்திரன் 61,820 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் கப்பச்சி டி.வினோத் 57,715 வாக்குகள் பெற்றார். குன்னூரில் ராமசந்திரன் 1,349 தபால் வாக்குகளும், அதிமுக வேட்பாளர் வினோத் 461 வாக்குகளும் பெற்றனர். திமுக வேட்பாளர் ராமசந்திரன் 4,105 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

கூடலூரில் மட்டும் அதிமுக தொடக்கத்தில் இருந்தே முன்னிலை பெற்றது. கூடலூரில் மொத்தமுள்ள 20 சுற்றுகளில் 19 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. கூடலூரில் அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலன் 61,161 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் 59,461 வாக்குகள் பெற்றார். கூடலூரில் அதிமுக வேட்பாளர் 1,700 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இன்னும் 20-ம் சுற்று மற்றும் தபால் வாக்குகள் மட்டுமே எண்ணப்பட வேண்டியுள்ளதால், இங்கு அதிமுக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x