

ஒன்மேன் ஆர்மியாக அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்த முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி, 27,000 வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் உள்ளார். தமிழக வேட்பாளர்களில் இவரே அதிக வாக்குகள் எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவுக்குப் பின், ஓபிஎஸ் முதல்வராக நியமிக்கப்பட பின்னர் அவர் விலகி சசிகலா தேர்வு செய்யப்படலாம் என்கிற நிலையில், அவர் சிறைக்குச் செல்ல யாரும் எதிர்பாராவகையில் முதல்வர் ஆனார் எடப்பாடி பழனிசாமி. அதன் பின்னர் தனது இடத்தை 4 ஆண்டுகளில் வலுவாகத் தக்கவைத்துக் கொண்டார்.
முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவதில் ஏற்பட்ட இடர்ப்பாடுகளைக் கடந்து முதல்வர் வேட்பாளராகக் களம் கண்ட அவர், தேர்தல் பிரச்சாரக் களத்தில் எடப்பாடி- ஸ்டாலினுக்கு மட்டுமே போட்டி எனும் அளவுக்கு பிரச்சாரத்தில் வலுவாகத் தன்னை நிரூபித்தார். அவரவர் சொந்தத் தொகுதியில் முடங்க, எடப்பாடி பழனிசாமி சொந்தத் தொகுதியான எடப்பாடி போகாமல் அனைத்துத் தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்தார்.
சில நாட்கள் மட்டுமே பிரச்சாரம் செய்தாலும் மண்ணின் மைந்தனான எடப்பாடி பழனிசாமியின் வெற்றி நிச்சயிக்கப்பட்டுவிட்டது. எட்டிப்பிடிக்க முடியாத எட்டாத தூரத்துக்குச் சென்றுவிட்டார். தற்போது அவர் திமுக வேட்பாளரைவிட 27,000க்கும் மேற்பட்ட வாக்குகளை அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.