Last Updated : 02 May, 2021 08:18 AM

 

Published : 02 May 2021 08:18 AM
Last Updated : 02 May 2021 08:18 AM

வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பே திருச்சி மேற்குத் தொகுதியில் கே.என்.நேரு வெற்றி பெற்றதாக சுவரொட்டி

கே.என்.நேரு வெற்றி பெற்றதாக போஸ்டர்.

திருச்சி

சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியுள்ள நிலையில், திருச்சி மேற்குத் தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு வெற்றி பெற்றதாகவும், அவருக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும், திருச்சி மாநகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில், திருச்சி மேற்குத் தொகுதி அனைவராலும் உற்று நோக்கப்படும் தொகுதியாக உள்ளது. ஏனெனில், இந்தத் தொகுதியில் திமுகவின் முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மீண்டும் போட்டியிட்டார். அதிமுக சார்பில் வி.பத்மநாதன் போட்டியிட்டார்.

கடந்த தேர்தலில் கே.என்.நேரு இந்தத் தொகுதியில் 92 ஆயிரத்து 49 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அரசின் முன்னாள் தலைமை கொறடா ஆர்.மனோகரன் அதிமுக சார்பில் போட்டியிட்டு 63 ஆயிரத்து 634 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.

இந்த நிலையில், இந்தத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று (மே 02) காலையில் தொடங்கியுள்ள நிலையில், திருச்சி மேற்குத் தொகுதியில் கே.என்.நேரு வெற்றி என்றும், அவருக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் திருச்சி மாநகர் முழுவதும் நேற்று (மே 01) இரவே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பலவற்றிலும் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறப்படும் நிலையில், அதிமுகவினரும் தாங்களே வெற்றி பெறுவோம் என்று உறுதியாகக் கூறி வருகின்றனர்.

இதனிடையே, தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ள நிலையில், திருச்சி மேற்குத் தொகுதியில் கே.என்.நேரு வெற்றி பெற்றதாகக் கூறி, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து திமுகவினர் சுவரொட்டி ஒட்டி மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x