Published : 02 May 2021 03:13 AM
Last Updated : 02 May 2021 03:13 AM

சோழிங்கநல்லூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு அதிகபட்சமாக 28 மேஜைகள்: வாக்கு எண்ணிக்கைக்கு தயார் நிலையில் தேர்தல் ஆணையம்

சென்னை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்காக அதிகபட்சமாக சோழிங்கநல்லூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு 28 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிஇடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. கரோனா காலம் என்பதால் வாக்கு எண்ணிக்கையின்போது பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

குறிப்பாக வாக்கு எண்ணிக்கைக்கான மேஜைகள், வாக்கு எண்ணிக்கை மையங்களில் போதியஇடைவெளி விட்டு போடப்பட்டுள்ளன. அத்துடன், இருக்கும் இடத்தைப் பொறுத்து, 10 மேஜைகள் முதல் அதிகபட்சமாக 28 மேஜைகள் வரை போடப்பட்டுள்ளன. மேலும்43 சுற்றுகள் வரை எண்ணப்படுகின்றன. இதனால், குறிப்பிட்ட தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தெரிய நள்ளிரவு வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது.

தபால் வாக்குகள் எண்ணப்படும்போதே, மேஜைகள் அடிப்படையில் மின்னணு இயந்திரங்கள்எடுத்து வரப்பட்டு எண்ணப்படும்.

தமிழகத்தில் சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிகபட்சமாக 991வாக்குச்சாவடிகள், குறைந்தபட்சமாக கீழ்வேளூர் தொகுதியில் 251 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வாக்கு எண்ணும் மையங்களின் இடவசதி, வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை, அமைக்கப்பட்டுள்ள மேஜைகள் அடிப்படையில் சுற்றுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மேஜைகள் அடிப்படையில், சோழிங்கநல்லூர், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், உத்திரமேரூர் தொகுதிகளில் அதிகபட்சமாக 28 மேஜைகள் போடப்பட்டுள்ளன. அடுத்ததாக கரூர், கவுண்டம்பாளையம், ஆவடி,மதுரவாயல், மாதவரம் தொகுதிகளுக்கு 20 மேஜைகள், அரவக்குறிச்சிக்கு 10, மீதமுள்ள 223 தொகுதிகளுக்கு 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சுற்றுகளைப் பொறுத்தவரை அதிகபட்சமாக பல்லாவரம், செங்கல்பட்டு தொகுதிகளுக்கு 43 சுற்றுகளாகவும், தாம்பரம் - 41, அம்பத்தூர், பல்லடம் - 39, திருப்பூர்(வடக்கு) - 38 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. குறைந்தபட்சமாக உத்திரமேரூர் தொகுதிக்கு 13 சுற்றுகளாகவும் அடுத்ததாக, காஞ்சிபுரம் - 16, ஸ்ரீபெரும்புதூர், கரூர், கீழ்வேளூர் ஆகிய தொகுதிகளுக்கு 18 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தமிழகம் முழுவதும் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 75 மையங்கள், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு அங்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்திலேயே தனியாக ஒரு பகுதி என 76 மையங்களில் 3,372 மேஜைகளில், 6,213சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட உள்ளது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x