Published : 07 Dec 2015 08:17 PM
Last Updated : 07 Dec 2015 08:17 PM
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு நிவாரண உதவியாக, மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக் குழு சார்பில் சேகரிக்கப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திங்கட்கிழமையன்று அனுப்பப்பட்டன.
தமிழகத்தில் பெய்து வரும் மழையால் கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக் குழு சார்பில் அனைத்து நகர, ஒன்றிய, தாலுகாவில் உள்ள கிளைகள் வாரியாக நிவாரண வசூல் இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.
இதில், முதல் கட்டமாக திரட்டப்பட்ட போர்வை, பாய், பால் பொருட்கள், அடுப்பு, பெண்களுக்கு தேவையான அத்தியாவாசிய பொருட்கள் உள்ளிட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கோவை காந்திபுரம் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டக் குழு அலுவலகத்தில் இருந்து நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டன.
ஒரு நாள் ஊதியம் வழங்க முடிவு
சென்னை வெள்ள நிவாரணத்துக்கு, கோவை, ஈரோடு மாவட்ட பஞ்சாலைகளில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை வழங்குவதாக அறிவித்துள்ளன.
இது குறித்து கோவை, ஈரோடு மாவட்ட பஞ்சாலைத் தொழிலாளர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு செயலாளர் கே.ஜி.ஜெகநாதன் கூறியதாவது: கோவை காட்டூரில் உள்ள ஏஐடியுசி அலுவலகத்தில் ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், சிஐடியு, ஏடிடி, பிஎம்எஸ் ஆகிய சங்கங்கள் கலந்து கொண்ட கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் தலைவர் மு.தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.
இதில், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பணிபுரியும் சுமார் 1.5 லட்சம் பேரின் ஒருநாள் ஊதியத்தை ஆலை நிர்வாகமே பிடித்தம் செய்து சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் சார்ந்துள்ள சங்கங்கள், அமைப்புகள் மூலமாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்க முடிவெடுக்கப்பட்டது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT