Last Updated : 01 May, 2021 06:57 PM

 

Published : 01 May 2021 06:57 PM
Last Updated : 01 May 2021 06:57 PM

புதுக்கோட்டையில் வாக்கு எண்ணும் மையத்துக்குச் செல்லவிருந்த 54 பேருக்கு கரோனா தொற்று

பிரதிநிதித்துவப் படம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை வாக்கு எண்ணும் மையத்துக்குச் செல்ல இருந்த 54 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் அரசு மகளிர் கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் 4 அடுக்குப் பாதுகாப்புடன் நாளை (மே 2) எண்ணப்படுகின்றன. இங்கு, வாக்கு எண்ணும் பணியில் 700 பேர், பாதுகாப்புப் பணியில் 850 பேர், வேட்பாளர்கள் 112 பேர், முகவர்கள் 1,568 பேர், சுகாதாரப் பணியாளர்கள் 68 பேர், செய்தியாளர்கள், உதவியாளர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பணிபுரிகின்றனர்.

கரோனா இல்லை என்பதற்கான சான்று இருந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து, 2 தினங்களுக்கு முன்பிருந்தே வாக்கு எண்ணும் மையத்துக்குச் செல்லும் அனைவருக்கும் பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம் நடத்தி மாதிரி சேகரிக்கப்பட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஆய்வகத்தில் ஆர்.டி-பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது.

அதன்படி, சுமார் 2,500 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 2 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உட்பட 18 வாக்கு எண்ணும் அலுவலர்கள், 10 போலீஸார், 25 முகவர்கள், 1 செய்தியாளர் என 54 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளவர்கள், முகவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்துகொண்ட மாற்று நபர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டதாகத் தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x