

விருதுநகரில் நேற்று திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த பெண் காவலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதோடு, இன்று ஒரே நாளில் செவிலியர், மருத்துவப் பணியாளர்கள், ரயில்வே காவலர் உள்ளிட 119 பேருக்கு கரோனா தொற்று கண்டறிப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஏட்டாகப் பணியாற்றி வந்த கனிமுத்து உடல்நிலை பாதிக்கப்பட்டு, நேற்று திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது.
அதையடுத்து, ஏட்டு கனிமுத்து இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்காக அவரது வீட்டுக்குச் சென்ற காவலர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரையும் கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதனால், துக்க நிகழ்ச்சிக்குச் சென்று வந்த போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் இன்று அருப்புக்கோட்டையில் உள்ள செவிலியர் ஒருவருக்கும், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் பணியாளர்கள் 4 பேருக்கும், விருதுநகரில் ரயில்வே பாதுகாப்புப்படை வீரர் ஒருவருக்கும் கரோனா தொற்று உள்ளது கண்டறியப்பட்டது.
இன்று ஒரே நாளில் மொத்தம் 119 பேருக்கு கரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டது.