Published : 01 May 2021 03:15 AM
Last Updated : 01 May 2021 03:15 AM

வீட்டைவிட்டு வெளியேறி சென்னை வந்த சிறுவனை தாக்கி பணம் பறித்த காவலர்கள் 2 பேர் சஸ்பெண்ட்

தந்தையிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்த சிறுவனைத் தாக்கி, அவரிடமிருந்து பணத்தைப் பறித்த 2 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

சிவகங்கை மாவட்டம் முத்தூர் சாலை கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன், 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், தனது தந்தையிடம் கோபித்துக் கொண்ட அச்சிறுவன், கடந்த புதன்கிழமை சென்னைக்கு வந்துள்ளார்.

சென்னையில் எங்கு செல்வது எனத் தெரியாமல், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் உறங்கியுள்ளார். அப்போது, அங்கு ரோந்துப் பணியில் இருந்த, சிஎம்பிடி காவல் நிலைய குற்றப்பிரிவு முதல்நிலைக் காவலர்கள் வேல்முருகன், அருண்கார்த்திக் ஆகியோர் சிறுவனிடம் விசாரித்துள்ளனர்.

அப்போது, தான் வீட்டை விட்டு வெளியேறியது குறித்து சிறுவன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, இரு போலீஸாரும் சிறுவன் வைத்திருந்த ரூ.63,500-ஐ பறித்துக் கொண்டு, அவரைத் தாக்கி விரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன், தனது தந்தையை செல்போனில் தொடர்புகொண்டு, தனக்கு நிகழ்ந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார்.

காவல் நிலையத்தில் புகார்

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் தந்தை உடனடியாக சென்னைக்கு வந்து, மகனுக்கு நிகழ்ந்த அநீதி குறித்து சென்னை பெருநகர காவல் துறை உயரதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு, சென்னை காவல் மேற்கு மண்டல இணை ஆணையர் ராஜேஸ்வரி, உதவி ஆணையர் ரமேஷ்பாபுவுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில், இரு காவலர்களும் சிறுவனைத் தாக்கி, பணத்தைப் பறித்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, முதல்நிலைக் காவலர்கள் வேல்முருகன், அருண்கார்த்திக் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து காவல் இணை ஆணையர் ராஜேஸ்வரி நேற்று உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x