Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

கரோனா காலத்தில் குடிநீருக்கும் திண்டாட்டம்; மதுரை மாநகராட்சி குடிநீரில் கலக்கும் கழிவுநீர்: பொதுமக்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு

மதுரை மாநகராட்சி பகுதிகளில் கழிவுநீர் கலந்து கலங்கலாக விநியோகிக்கப்படும் குடிநீர்.

மதுரை

மதுரை மாநகராட்சி 65, 66, 67, 68 வார்டுகளில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் பொதுமக்கள் வாந்தி, வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மதுரை மாநகராட்சியின் பெரும் பாலான பழைய வார்டுகளில் உள்ள குடிநீர் குழாய்கள் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது. அதன் பிறகு பழைய வார்டுகளில் குடிநீர் குழாய்கள் மாற்றப்படவே இல்லை.

தற்போது பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பழைய குடிநீர் குழாய்கள் மாற்றப்பட்டு, புதிய குழாய் பதிக்கும் பணிகள் நடக்கின்றன. ஆனால், இப்பணிகள் இன்னும் முழுமையாகத் தொடங்கி முடியவில்லை. அதுபோல், பாதாள சாக்கடை கட்டமைப்பும் போதிய பராமரிப்பின்றி அடிக்கடி உடைந்து திறந்தவெளியில் கழிவுநீர் அவ்வப்போது பெருக் கெடுத்து ஓடுகிறது.

இந்தப் பகுதிகளில் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து கலங்களாக குறிப்பாக 65, 66, 67, 68 வார்டுகளில் கடந்த ஒருவாரமாக கழிவுநீர் கலந்த குடிநீர்தான் விநியோகிக்கப்படுகிறது.

இதனால் சின்ன கண்மாய், அனுப்பானடி, கேட்லாக் ரோடு, சண்முகா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து அனுப்பானடியைச் சேர்ந்த மக்கள் கூறியதாவது: 4 நாட்களுக்கு ஒரு முறைதான் மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அந்த குடிநீரும் தூசி, கழிவுநீர் கலந்து மங்கலாக வருகிறது. துர்நாற்றம் வீசுகிறது. இந்த நீரை குடிப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடல்நலக் கோளாறு ஏற்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் குடிநீர் வழங்குவதே பெரிய விஷயம் என்கின்றனர்.

கரோனா பணியைக் காரணம் கூறி, சுகாதாரமான குடிநீர் விநியோகிக்க மறுப்பது நியாயம் அல்ல. மாசடைந்த குடிநீரால் கரோனா வைரஸை விட மற்ற நோய்களால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x