Last Updated : 30 Apr, 2021 04:42 PM

 

Published : 30 Apr 2021 04:42 PM
Last Updated : 30 Apr 2021 04:42 PM

பாண்லே பாலகங்களில் ரூ.5-க்கு உணவு: ஆளுநர் தமிழிசை தொடங்கி வைத்தார்

பாண்லே பாலகங்களில் ரூ.5 க்கு குறைந்த விலையில் உணவு வழங்கும் திட்டத்தை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

புதுச்சேரியில் கரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேவேலையில் இந்த பெருந்தொற்றுச் சூழலில் புதுச்சேரி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளையும் அரசு மேற்கொண்டுள்ளது.

புதுச்சேரியில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதனை கருத்தில்கொண்டு ஏழை மக்களுக்குப் பொருளாதாரச் சுமையைக் குறைக்க அரசின் பாண்லே கடைகள் மூலமாக ரூ.1 -க்கு முகக்கவசம், 50 மி.லி. கொண்ட கிருமிநாசினி ரூ.10-க்கும் விற்கப்படுகிறது.

இதேபோல் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.10க்கு குறைந்த விலையில் மதிய உணவு தரும் முறையும் தொடங்கப்பட்டுள்ளது. இவற்றை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் புதுச்சேரியில் வேறு சில இடங்கள், அரசின் பாண்லே பாலகங்களில் ரூ.5க்கு உணவு வழங்க ஏற்பாடு செய்வது குறித்தும், அதற்காக சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்தும் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டமும் நடத்தினார்.

தொடர்ந்து சண்முகாபுரத்தில் உள்ள மத்திய சமையற்கூடத்தைப் பார்வையிட்ட ஆளுநர் சுகாதார முறையில் தரமான உணவு சமைக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தார். உணவின் தரத்தை அறிய தானே, உண்ண உணவு பொட்டலத்தையும் வாங்கிச் சென்றார்.

இந்நிலையில் பாண்லே பாலகங்கள் மூலம் ரூ.5க்கு குறைந்த விலையில் சுகாதாரமான உணவு வழங்கும் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள பாண்லே பாலகத்தில் இன்று (ஏப்.30 ) நடைபெற்றது. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ரூ.5க்கு குறைந்த விலையில் உணவு முறைத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், ஆளுநரின் ஆலோசகர்கள் சந்திரமவுலி, ஏ.பி மகேஸ்வரி, பாண்லே நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர். புதுச்சேரியில் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி, ராஜீவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம்,ஜிப்மர் ஆகிய இடங்களில் உள்ள நான்கு பாண்லே பாலகங்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் வரவேற்பை பொருத்து மேலும் உள்ள பாண்லே பாலகங்களில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x