Published : 30 Apr 2021 02:47 PM
Last Updated : 30 Apr 2021 02:47 PM

கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்குவோம்: மே 2 அதிமுகதான் ஆட்சி அமைக்கும்; அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்: கோப்புப்படம்

சென்னை

கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று (ஏப். 30) செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:

"முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம், இயக்குநர் கே.வி.ஆனந்த் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். கே.வி.ஆனந்த் மறைவு அவருடைய ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் பேரிழப்பு. குணச்சித்திர நடிகர் செல்லத்துரை மறைவு மிகுந்த வருத்தத்தை தரக்கூடியது. இவர்களுடைய மறைவுக்கு அதிமுக சார்பாகவும், முதல்வர் பழனிசாமி சார்பாகவும் இரங்கல் தெரிவிக்கிறேன்.

நேற்று கருத்துக்கணிப்பு என்ற போர்வையில் கருத்துத் திணிப்பு நடைபெற்றிருக்கிறது. கருத்துத் திணிப்புகளை தவிடுபொடியாக்கி அதிமுக இமாலய வெற்றி பெற்றிருக்கிறது என்பது வரலாறு. கருத்து கணிப்புகளை கருத்து திணிப்பாகத்தான் அதிமுகவினரும் மக்களும் பார்க்கின்றனர். லட்சக்கணக்கில் வாக்காளர்கள் உள்ள தொகுதிகளில் 200 பேரிடம் ஒரு பேப்பரைக் கொடுத்து 'டிக்' செய்ய சொல்லி எடுக்கும் கருத்துக்கணிப்புகள் என்றுமே நிறைவேறியதில்லை.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 86-90 தொகுதிகளையே பெறும், ஆட்சியைப் பிடிக்க முடியாது என ஒரு செய்தி நிறுவனம் தெரிவித்தது. திமுக 124-140 வரை பெறும் என்றனர். ஆனால், ஆட்சியைப் பிடித்தது அதிமுக. மற்றொரு செய்தி நிறுவனம் அதிமுக 95-99 தொகுதிகளை பெறும் என்றனர். திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்றனர்.

ஆனால், அது நிறைவேறவில்லை. மற்றொரு செய்தி நிறுவனம், அதிமுக 90 தொகுதிகளை பிடிக்கும், திமுக 140 தொகுதிகளை பிடிக்கும் என்றனர். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை. மற்றொரு செய்தி நிறுவனம், நாங்கள் 95 தொகுதிகள், திமுக 132 தொகுதிகள் என்றது. அதேபோன்று, மற்றொரு கருத்துக்கணிப்பில், அதிமுக 103 தொகுதிகளும், திமுக 120 தொகுதிகளை பெறும் என்றனர். ஆனால், அதனை தவிடுபொடியாக்கினோம்.

2011-ல் ஒரு செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் 115-130 தொகுதிகளை திமுக பெறும் என்றனர். அது நடக்கவில்லை. மற்றொரு கருத்துக்கணிப்பில் திமுக 124 தொகுதிகளும் அதிமுக 110 தொகுதிகளும் பெறும் என்றனர். அதனையும் தவிடுபொடியாக்கினோம்.

கருத்துக்கணிப்புகள் எந்த காலத்திலும் எடுபடாத ஒரு விஷயம். எந்த காலத்திலும் இல்லாத மகத்தான வெற்றியை அதிமுக பெறும். திமுகவுக்கு ஆதரவான எழுச்சியை மக்கள் கொடுத்துள்ளனர். இந்த கருத்துக்கணிப்புகளின் மூலம் ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது. அதிமுக தொண்டர்களின் காதுகளில் இனிப்பான செய்தி வரும். நாங்களும் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெறுவோம்.

கடந்த முறை கருத்துக்கணிப்புகளின்போது, 'இது உண்மையான தேர்தல் முடிவு அல்ல, பொறுத்திருந்து பாருங்கள்' என ஜெயலலிதா சொன்னார். அதைத்தான் இப்போதும் சொல்கிறேன். 2-ம் தேதி நாங்கள் தான் வருவோம். வாக்கு எண்ணிக்கையின்போது முகவர்கள் முழுமையாக இருந்து வெற்றி செய்தியுடன் வாருங்கள்.

தபால் வாக்குகளை பொறுத்தவரையில் கடந்த காலங்களில் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ, அதே நடைமுறைதான் பின்பற்ற வேண்டும். மாறுதல் கூடாது. எங்களின் இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டனர்.

திமுக முடிவுக்கு முன்னரே வெற்றி போஸ்டர் ஒட்டுவார்கள். ஆனால், அது ஏமாந்த நரி கதையாகத்தான் முடியும். கற்பனையான கனவுடன் திமுக இருக்கிறது. மீண்டும் எம்ஜிஆர் - ஜெயலலிதா ஆட்சி அமையும். அதிமுகவுக்கு ஆதரவான அலை வீசுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் வேறு. சட்டப்பேரவைத் தேர்தல் வேறு. குண்டர்கள் மூலம் சதித்திட்டம் தீட்ட திமுக முயற்சிக்கும். அதனை முறியடிக்கும் வகையில் தேர்தல் ஆணையம், காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x