Published : 30 Apr 2021 03:12 AM
Last Updated : 30 Apr 2021 03:12 AM

மூதாட்டிக்கு இழப்பீடு வழங்கிய வீட்டு வசதி வாரியம்: 27 ஆண்டுகால வழக்குக்கு கோவை நீதிமன்றம் முற்றுப்புள்ளி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, மூதாட்டியின் நிலத்துக்கு வீட்டு வசதி வாரியம் உரிய இழப்பீடு அளித்துள்ளது. இதனால் 27 ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த வழக்கை, கோவை சார்பு நீதிமன்றம் நேற்று முடித்து வைத்துள்ளது.

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதியம்மாள் (90).இவருக்கு சொந்தமான நிலத்தை கடந்த 1983-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வீட்டுவசதி வாரியம் கையகப்படுத்தியது. இந்த நிலத்துக்கு உரியஇழப்பீடு கிடைக்காததால், 1994-ம்ஆண்டு நீதிமன்றத்தில் சரஸ்வதியம்மாள் வழக்கு தொடர்ந்தார். இறுதியாக, நிலத்துக்கு இழப்பீடாகவட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ.67.87 லட்சத்தை 2021, மார்ச் 31-ம்தேதிக்குள் செலுத்த வேண்டும் என கடந்த ஜனவரி மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை வீட்டுவசதி வாரியம் நிறைவேற்றாததால், கோவை இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் சரஸ்வதியம்மாள் தாக்கல் செய்திருந்த மனு, கடந்த 21-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மேசை, நாற்காலி, பீரோ உள்ளிட்ட சொத்துகளையும், மாவட்ட வருவாய் அலுவலகத்தில் உள்ள மேசை, நாற்காலி, பீரோ, கார், ஜீப் உள்ளிட்ட சொத்துகளையும் பறிமுதல் செய்யவும், கோவை வீட்டுவசதி வாரிய அலுவலகத்தை பூட்டி ‘சீல்’ வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு நேற்று மீண்டும்விசாரணைக்கு வந்தது. அப்போது,மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘வருமான வரிபிடித்தம்போக கோவை டாடாபாத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் சார்பில்மொத்தம் ரூ.62.15 லட்சம் இழப்பீடாக வங்கிக் கணக்கில் செலுத்தப் பட்டுள்ளது. எனவே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் மனுவை முடித்துவைக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார். இதையடுத்து 27 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x