கணவருடன் கருத்து வேறுபாடால் இரண்டு குழந்தைகள் கொலை: தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு சிகிச்சை

கணவருடன் கருத்து வேறுபாடால் இரண்டு குழந்தைகள் கொலை: தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு சிகிச்சை
Updated on
1 min read

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இரண்டு குழந்தைகளை கொன்று, தாயார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக பல்லடம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் பிரபு (35).கூலித்தொழிலாளி. இவரது மனைவிதமிழ்ச்செல்வி (28). தம்பதிக்கு பிருந்தா (7), பிரசந்தா (5) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள். தம்பதி இடையே கருத்து வேறுபாடு எழுந்ததால், தனியாக வாழ்ந்து வந்தனர். கடந்த 9 மாதங்களாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் குப்புசாமிநாயுடுபுரத்தில் தனது அண்ணன் மற்றும் தாயாருடன் தமிழ்ச்செல்வி வசித்து வந்தார்.

இந்நிலையில், பிரபுவுடன் சேர்ந்து வாழ தமிழ்ச்செல்வியின் குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. விருப்பம் இல்லாததால் தமிழ்ச்செல்வி தவிர்த்து வந்தாராம். இதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்த பிரபுவை அழைத்திருந்ததாக தெரிகிறது. இதில் விருப்பம் இல்லாத தமிழ்ச்செல்வி, தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் அருந்தினார். மயக்கமடைந்த நிலையில் மூவரும் மீட்கப்பட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி மூத்த மகள்பிருந்தா நேற்று காலை உயிரிழந்தார்.

தமிழ்ச்செல்வி மற்றும் பிரசந்தாஆகியோர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு இளைய மகள் பிரசந்தா, நேற்று மதியம் உயிரிழந்தார். சிறுமிகள் உயிரிழந்த நிலையில், தமிழ்ச்செல்வி தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக தமிழ்ச்செல்வியின் தாயார் சரோஜா அளித்த புகாரின் பேரில், பல்லடம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in