Published : 30 Apr 2021 03:13 AM
Last Updated : 30 Apr 2021 03:13 AM

தனியார் மருத்துவமனைகளுக்கு மருந்து விநியோகம் நிறுத்தம்; தடுப்பூசி வழங்குவதில் அரசு மருத்துவமனைகளுக்கு முன்னுரிமை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கே தடுப்பூசி மருந்து வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்ட 9 அரசு மருத்துவமனைகள், மாநகராட்சி மருத்துவமனை, 14 ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அரசு காப்பீடு பட்டியலில் உள்ள 49 தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் தடுப்பூசி குறித்த அச்சம் இருந்ததால், தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கை மிகக்குறைவாக இருந்தது. தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் தடுப்பூசி போட வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசி மருந்தில், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகள் தங்கள் தேவையை குறிப்பிடும் போது, அதில் குறிப்பிட்ட அளவு மருந்து சூரம்பட்டியில் உள்ள கிடங்கில் இருந்து வழங்கப்பட்டு வந்தது. தற்போது தடுப்பூசி மருந்து வரத்து குறைவாலும், அரசு மருத்துவமனைகளில் அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் வருவதாலும் தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி ஒதுக்கீடு செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் கூறும்போது, தடுப்பூசி போடத்தொடங்கியபோது குறிப்பிட்ட அளவு தடுப்பூசி ஒதுக்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி மருந்து வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் முதல் டோஸ் தடுப்பூசி மருந்து எடுத்தவர்களுக்கு மட்டுமாவது, இரண்டாம் டோஸ் மருந்து கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் கூறியதாவது:

அரசு, மாநகராட்சி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை கொடுத்து மருந்து ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கூடுதலாக தடுப்பூசி மருந்துகள் வரும்பட்சத்தில் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கீடு செய்யலாம். மேலும், தனியார் மருத்துவமனைகள் நேரடியாக தடுப்பூசி மருந்தை கொள்முதல் செய்யவும் வாய்ப்புள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் முதல் டோஸ் மருந்து எடுத்தவர்கள் பட்டியலை நான்கு நாட்களுக்கு முன்னதாக எங்களிடம் வழங்கினால், அவர்களுக்கு இரண்டாம் டோஸ் மருந்தினை அரசு மருத்துவமனைகளில் வழங்கத் தயாராக இருக்கிறோம். நகரம், கிராமம் என வித்தியாசம் இல்லாமல், மாவட்டம் முழுவதும் கரோனா தடுப்பூசி மருந்து சென்று சேர வேண்டும் என்ற நோக்கோடு செயல்பட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x