Published : 30 Apr 2021 03:13 AM
Last Updated : 30 Apr 2021 03:13 AM
கோயம்பேடு சந்தையில் வணிகர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் கடந்த ஒரு மாதத்தில் நடத்தப்பட்ட 10,567 பரிசோதனைகளில் 29 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு முக்கியமான கரோனா பரவல் மையமாக கோயம்பேடு சந்தை இருந்தது. இதைத்தொடர்ந்து சுமார் 3 மாதங்களுக்கு சந்தை மூடப்பட்டு, வெவ்வேறு இடங்களில் தற்காலிகமாக சந்தைகள் செயல்பட்டு வந்தன.
இதைத் தொடர்ந்து அந்த சந்தை மீது மாநகராட்சி நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. தினமும் சுமார் 400 பேரை தோராயமாக தேர்வு செய்து, பரிசோதித்து வருகிறது.
கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 10,567 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 29 பேருக்கு மட்டுமே தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோயம்பேடு சந்தை அனைத்து காய்கறி வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகர் கூறியதாவது:
கோயம்பேடு சந்தையில் தொற்று அதிகமாக பரவி வருவதாக வதந்திகள் பரப்பப்படுகிறது. உண்மையில் தினமும் சுமார் 400 பேருக்கு பரிசோதனை செய்தால் ஓரிருவருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்படுகிறது.
இந்த சந்தையில் வியாபாரிகள் முதல் தொழிலாளர்கள் வரை அனைவரும் கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளை முறையாக கடைபிடித்து வருகிறோம். அனைவரும் முகக்கவசம் அணிந்து வருகிறோம்.
பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டோம். எனவே தற்போது கோயம்பேடு சந்தையில் கரோனா தொற்று பரவல் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT