Last Updated : 29 Apr, 2021 06:24 PM

 

Published : 29 Apr 2021 06:24 PM
Last Updated : 29 Apr 2021 06:24 PM

7,000 ரெம்டெசிவிர், 200 டோசிலிசுமாப் மருந்து விரைந்து கிடைக்க நடவடிக்கை: பிரதமருக்கு புதுச்சேரி எம்.பி. கடிதம்

வைத்திலிங்கம்: கோப்புப்படம்

புதுச்சேரி

புதுச்சேரிக்கு 200 டோசிலிசுமாப், 7,000 ரெம்டெசிவர் மருந்து கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என, பிரதமர் மோடி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆகியோருக்கு, வைத்திலிங்கம் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக, அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது:

"புதுச்சேரி மாநிலத்துக்கு 3,000 ரெம்டெசிவிர் மருந்து கிடைக்க ஒப்புதல் அளித்துள்ளதற்கு நன்றி. புதுச்சேரியில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 8,500-ஐக் கடந்துள்ளது. மேலும், தினமும் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகிறார்கள்.

ஆக்சிஜன், வென்டிலேட்டர் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 27-ம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்களுக்குத் தேவைப்படும் டோசிலிசுமாப் மருந்து மாநிலங்களுக்கு ஒதுக்கீடு தொடர்பான உத்தரவு வெளியாகியுள்ளது.

இந்த ஒதுக்கீட்டிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் விடுபட்டுள்ளது. இந்த விவகாரத்தில், பிரதமர் மோடி தலையிட்டு 200 டோசிலிசுமாப் மருந்து, மீதமுள்ள 7,000 ரெம்டெசிவிர் மருந்து புதுச்சேரிக்கு விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஜிப்மரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான படுக்கை வசதிகளையும் அதிகப்படுத்த வேண்டும்".

இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x