தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு நழுவும் வேட்பாளர்கள்: நடவடிக்கை கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு நழுவும் வேட்பாளர்கள்: நடவடிக்கை கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
Updated on
1 min read

தேர்தலின்போது வாக்குறுதிகளைக் கொடுத்து, வெற்றி பெற்ற பிறகு அவற்றை நிறைவேற்றாத வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.

சென்னை, பரங்கிமலையைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார், அவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகளும், சுயேச்சை வேட்பாளர்களும் வாக்குகளைப் பெறுவதற்காக இலவசங்களை வழங்குவதாக வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர்.

இதுபோல வாக்குறுதிகளை அளித்துவிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட பின், அவற்றை நிறைவேற்றத் தவறும் மக்கள் பிரதிநிதிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தேர்தல் விதிகளில் இடமில்லை என்பதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தேர்தலுக்கு முன், மாநில நிதி நிலையை அறிந்து தேவையில்லாத செலவினங்களைக் குறைக்கவும், இலவசங்கள் தகுதியான நபர்களைச் சென்றடைவதை உறுதி செய்வதாக உத்தரவாதம் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட விதிகளை வகுக்க வேண்டும்.

இது சம்பந்தமாக தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்காததால், தனது மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, இந்த விவகாரம் ஏற்கெனவே நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதால், இந்த வழக்கில் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in