Published : 29 Apr 2021 02:49 PM
Last Updated : 29 Apr 2021 02:49 PM

இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு, கட்டுப்பாடுகள் தொடரும்: வாக்கு எண்ணிக்கை பணிக்கு விலக்கு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை

அடுத்த உத்தரவு வரும் வரை தமிழகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு தொடரும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை பணியில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கரோனா தொற்றுப் பரவல் இரண்டாவது அலை மார்ச் முதல் வாரத்திலிருந்து ஏப்ரல் முதல் வாரம் வரை மும்மடங்கு வேகத்தில் அதிகரித்தது. தற்போது அது மேலும் அதிக வேகத்தில் பரவி வருகிறது. தமிழகத்தில் தினசரி தொற்று எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 16,665 எனவும், சென்னையின் தினசரி தொற்று எண்ணிக்கை 4,764 எனவும் உள்ளது.

தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில், வீடுகளில் தனிமைப்படுத்துதலில் உள்ளோர் எண்ணிக்கை 1,10,308 பேர். இது தொடர்ந்து தினமும் அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் கரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்று ஊரடங்கு நீட்டிப்பு, மே 2 வாக்கு எண்ணிக்கையில் கடைப்பிடிக்கப்பட வேண்டியவை குறித்து தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன், இன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் ஞாயிறு முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, கட்டுப்பாடுகளை நீட்டித்து தலைமைச் செயலர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், சலூன், ஷாப்பிங் மால்கள், வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் மாற்றம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த உத்தரவு வரும் வரை தமிழகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும். இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இறைச்சி, மீன் விற்பனைக் கடைகள் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களிலும் மூடி இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. எனினும், தினமும் நடைபெறும் பூஜைகள் / பிரார்த்தனைகள் / சடங்குகளை, வழிபாட்டுத் தல ஊழியர்கள் மூலம் நடத்துவதற்குத் தடையில்லை.

கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மதம் சார்ந்த திருவிழாக்கள் மற்றும் கூட்டங்களுக்கு, குடமுழுக்கு/ திருவிழா நடத்துவதற்கு பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல், கோயில் பணியாளர்கள் மட்டும் கலந்துகொண்டு, உரிய நடைமுறைகளைப் பின்பற்றி குடமுழுக்கு நடத்த மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. புதிதாக குடமுழுக்கு / திருவிழா நடத்த அனுமதி இல்லை.

* திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

* இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 25 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது உள்ளிட்ட ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் தொடரும்.

வாக்கு எண்ணிக்கை பணிக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குச் செல்லும் வேட்பாளர்கள், முகவர்கள், உணவு எடுத்துச் செல்பவர்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடும் கிடையாது. வாக்கு எண்ணிக்கைக்கு முழு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அன்றைய தினம் மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x