Last Updated : 29 Apr, 2021 01:58 PM

 

Published : 29 Apr 2021 01:58 PM
Last Updated : 29 Apr 2021 01:58 PM

தஞ்சாவூர் அருகே சாலையோரம் வைக்கப்பட்ட பிரம்மாண்ட பேனர்; சரிந்து விழுந்ததில் பெண் பரிதாப பலி

விஜயராணி

தஞ்சாவூர்

தஞ்சாவூர் அருகே சாலையோரம் வைக்கப்பட்ட பிரம்மாண்ட பேனர் சரிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பரிதாபமாக பலியானார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள மேல மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது தந்தை முத்துவீரப்பன் இறந்துவிட்டார். இதையடுத்து மேல மேட்டுப்பட்டி நெடுஞ்சாலையில் தனது தந்தையின் படத்திறப்பு விழாவிற்கு மிகப் பிரம்மாண்டமான அளவில் ரவிச்சந்திரன் பேனர் வைத்தார்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே அம்மணி பட்டு கிராமத்தைச் சேர்ந்த சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மனைவி விஜயராணி (55), திருவோணம் அருகே உட்பம் விடுதியில் உள்ள உறவினர் வீட்டின் துக்க நிகழ்வுக்குச் சென்றுவிட்டு நேற்று மாலை ஊர் திரும்பினார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பரமசிவம் என்பவரிடம் லிப்ட் கேட்டு ஏறி வந்துள்ளார். மேல மேட்டுப்பட்டி பகுதியில் வந்தபோது ரவிச்சந்திரன் வைத்திருந்த பிரம்மாண்டமான பேனர் திடீரென விஜயராணி மீது சரிந்து விழுந்தது.

இதில் பலத்த காயமடைந்த விஜயராணியை மீட்டு அங்கிருந்தவர்கள், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் நேற்று நள்ளிரவு சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

தகவலின் பேரில் திருவோணம் போலீஸார் பேனரைக் கைப்பற்றி ரவிச்சந்திரன் மீது வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர். சென்னை உயர் நீதிமன்றம் சாலை ஓரங்களில் பேனர் வைக்கக்கூடாது என உத்தரவிட்டும் சரியான விதிமுறைகளைக் கடைப்பிடிக்காததே இதுபோன்ற விபத்துக்குக் காரணம் என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x