Published : 29 Apr 2021 12:31 PM
Last Updated : 29 Apr 2021 12:31 PM

சந்தேகத்தின் நிழல் விழாத வகையில் வாக்கு எண்ணிக்கையை நடத்திட வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு முத்தரசன் கடிதம்

அரசியலமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள வாக்குரிமையைப் பயன்படுத்தி, ஜனநாயக் கடமையை வாக்காளர்கள் நிறைவேற்றியுள்ளனர். அடுத்து வாக்கு எண்ணிக்கை சார்பற்ற நடுநிலையோடு, வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடப்பதை இந்தியத் தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர், தமிழ்நாடு அரசின் பொதுத் (தேர்தல்கள்) துறை முதன்மைச் செயலாளரின் தனி கவனத்திற்காகவும், உரிய நடவடிக்கைக்காகவும், சட்டப்பேரவைத் தேர்தல் 2021 வாக்கு எண்ணிக்கை தொடர்பாக சில கோரிக்கைகளை முத்தரசன் வைத்துள்ளார்.

இது தொடர்பாக முத்தரசன் எழுதியுள்ள கடிதம்:

''இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, இந்தியத் தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் (2021) நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப் பதிவு நடந்து முடிந்துள்ளது. தேர்தல் ஆணையம் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி விரிவான விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் விளம்பரங்கள் செய்துள்ள போதிலும் சுமார் 72 சதவீத வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நாளை மறுநாள் (02.05.2021) காலை 8 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலின் இரண்டாம் அலைத் தாக்குதல் மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நோய்த் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையமும் சில கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது.

நோய்த் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் மற்றும் அரசின் வழிகாட்டுதல்களை ஆதரித்து, ஒத்துழைக்க உறுதியளிக்கிறோம். அதேசமயம் வாக்கு எண்ணிக்கை மீது சந்தேகத்தின் நிழல் தேர்தல் ஆணையத்தின் மீது படித்து விழாதபடி, வாக்கு எண்ணிக்கை நடவடிக்கைகள் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் அமைய வேண்டியது அவசியமாகும்.

குறிப்பாக அஞ்சல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக முன்னுக்குப் பின் முரண்பட்ட தகவல்கள் வெளியாகின்றன. அஞ்சல் வாக்குகள் எண்ணிக்கைக்கு 500 வாக்குகளுக்கு ஒரு மேசை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிக வாக்குகள் பதிவாகியிருந்தால் கூடுதல் மேசைகள் (4 மேசைகள் வரை) போட்டுக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அஞ்சல் வாக்குகள் எண்ணிக்கை நிறைவடைந்ததும் அதன் முடிவில் வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகள் எண்ணிக்கையை அந்த அறையில் உள்ள அலுவலர்கள், முகவர்கள் அனைவரும் வெளிப்படையாக அறிந்துகொள்ளும் நிலை ஏற்படுகிறது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை அலுவலர் (இவர் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலராக இருப்பார்) விவரங்களைத் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தேர்தல் ஆணையத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வளவு வெளிப்படையான அஞ்சல் வாக்குகளின் எண்ணிக்கையை மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இதில் தேர்தல் ஆணையம் தயக்கம் காட்ட எந்தவொரு நியாயமான காரணமும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம். அடுத்த ஒரு முக்கியப் பிரச்சினை அஞ்சல் வாக்கு விவரங்களை முழுமைப்படுத்தாத நிலையில், மின்னணு வாக்குப் பதிவு எண்ணிக்கையை நிறைவுசெய்யக் கூடாது என்பது தொடர்பானது.

இதில் அஞ்சல் வாக்கு விவரங்களை அறிவித்த பின்னர்தான் கடைசிச் சுற்றும், அதற்கு முந்தைய சுற்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெற வேண்டும் எனத் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான கையேட்டில் (15.15.04 (9) தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல் திட்டவட்டமாகப் பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

அரசியலமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள வாக்குரிமையைப் பயன்படுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவை அமைவதற்கான ஜனநாயகக் கடமையை வாக்காளர்கள் நிறைவேற்றியுள்ளனர். அடுத்து வாக்கு எண்ணிக்கை சார்பற்ற நடுநிலையோடு, வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடப்பதை, அரசியலமைப்பு அதிகாரத்துடன் தற்சார்பு அமைப்பாகச் செயல்படும் இந்தியத் தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.

இதில் எந்தவொரு நிலையிலும் சந்தேகத்தின் நிழல் தேர்தல் ஆணையம் மீது விழுந்துவிடாமல் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் வெளிப்படையாகச் செயல்பட வேண்டும்''.

இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x