Published : 29 Apr 2021 03:13 AM
Last Updated : 29 Apr 2021 03:13 AM

காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக பதாகை: சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் சர்ச்சை

திருப்பூர் மாவட்டம் காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடுபவர் ஏ.எஸ்.ராமலிங்கம். இவர், வெற்றி பெற்றதாக பழையகோட்டை அதிமுக சார்பில் பதாகைவைக்கப்பட்டுள்ளது. அதில், "காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக வேட்பாளர் ஏ.எஸ்.ராமலிங்கம் அவர்களை 13,483 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த வாக்காளப் பெருமக்களுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் நன்றி, நன்றி. நன்றி." என குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரை தொடர்புகொள்ள என குறிப்பிட்டு அவரது அலைபேசி எண்ணும் பதிவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பழையகோட்டை ஊராட்சி மக்கள் சிலர்கூறும்போது, மேற்குறிப்பிடப்படும் பதாகை, தேர்தலின் பிரச்சாரத்தின்போது பழையகோட்டை ஊராட்சி பேருந்து நிறுத்தம் அருகே வைக்கப்பட்டது.

இந்நிலையில், தேர்தல் பிரிவு அலுவலர்களுக்கு கிராம மக்கள் புகார் அளித்ததையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சென்று பதாகையை அகற்ற வைத்தார். தற்போது வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னரே வெற்றி பெற்றதாக பதாகை வைத்ததாக தற்போது வைரலாகி வருகிறது" என்றனர்.

இதுதொடர்பாக அதிமுக வேட்பாளர் ஏ.எஸ்.ராமலிங்கம் ‘இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம்’ கூறும்போது, "இந்த வேலையை யார் செய்தது என்று தெரியவில்லை. ஆர்வமிகுதியால் செய்தார்களா அல்லது என் பெயரை கெடுக்கும் நோக்கில் செய்தார்களா என்பது புரியவில்லை. அங்குள்ளகட்சிக்காரர்களிடம் விசாரித்தபோது, அவர்களும் தெரியவில்லை என்று கூறினர்.

பதாகையில் அச்சகம் உள்ளிட்ட விவரங்கள் இல்லாததால், யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. தேர்தல் முடிவுக்கு முன்னரே வெற்றி பெற்றதைபோல வாழ்த்துகள் கூறி, ஆரவாரத்தை பதாகைகளில் வெளிப்படுத்தியுள்ளனர். இதுதேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது. கண்ணியத்தையும், மக்கள் நலன் சார்ந்த நல்லெண்ணத்தையும் மாசுபடுத்துவதாக உள்ளது. அதிமுக இயக்கத்தின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளது. அனைவரும் தேர்தல்முடிவுகள் வரும் வரை அமைதி காக்க வேண்டும். இதனை சமூக வலைதளங்களில் யார்வைரலாக்கி வருகின்றனர் என்பதுதெரியவில்லை. இதுதொடர்பாக கட்சியின் மண்டல பொறுப்பாளருக்கு தெரியப்படுத்தியுள்ளேன். திருப்பூர்மாவட்ட சைபர் கிரைம் போலீஸாரிடமும் புகார் அளிக்க இருக்கிறேன்" என்றார்.

காங்கயம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரெங்கராஜன் கூறும்போது, "இதுதொடர்பாக யாரும் புகார் அளிக்கவில்லை. பதாகை விவகாரம் தொடர்பாக விசாரிக்கிறோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x