Last Updated : 28 Apr, 2021 02:38 PM

 

Published : 28 Apr 2021 02:38 PM
Last Updated : 28 Apr 2021 02:38 PM

தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருடன் அமைச்சர் நடராஜன் ரகசிய சந்திப்பு; ஆட்சியரிடம் திருச்சி கிழக்குத் தொகுதி திமுக வேட்பாளர் புகார்

புகார் அளித்த இனிகோ இருதயராஜ்.

திருச்சி

தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருடன் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் ரகசியச் சந்திப்பு நடத்தியதாக, ஆட்சியரிடம் திருச்சி கிழக்குத் தொகுதி திமுக வேட்பாளர் புகார் அளித்துள்ளார்.

திருச்சி கிழக்குத் தொகுதியில் அதிமுக சார்பில் தொகுதியின் இப்போதைய எம்எல்ஏவும், மாநில சுற்றுலாத் துறை அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன், திமுக சார்பில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவரான இனிகோ இருதயராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரை அவரது அலுவலகத்தில் ரகசியமாகச் சந்தித்து பேசினார் என்று கூறி, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினியிடம் இனிகோ இருதயராஜ் இன்று (ஏப். 28) புகார் மனு அளித்தார்.

அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் இனிகோ இருதயராஜ் கூறியதாவது:

"திருச்சி கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான வெல்லமண்டி என். நடராஜன் ஏப். 26-ம் தேதி, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரை அவரது அலுவலகத்தில் தனியாகச் சந்தித்து சுமார் அரை மணி நேரம் பேசியுள்ளார்.

தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்குள் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் வாக்குச்சீட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது அலுவலக ஊழியர்கள் யாரையும் அந்த அறைக்குள் அனுமதிக்காமல், அரை மணி ரகசியமாகப் பேசிக் கொண்டிருந்தது சந்தேகத்தை எழுப்புகிறது. எனவே, இது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளேன்.

தேர்தல் தொடர்பான எந்த அறிவிப்பாக இருந்தாலும் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்துக்குச் சென்று கையெழுத்திட்டு வருவதுதான் வழக்கம். ஆனால், அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் வீட்டுக்கே சென்று அறிவிப்புகள் தரப்படுவதாகத் தகவல் கிடைத்துள்ளது. எனவே, அதுகுறித்தும் விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளேன்.

மேலும், அஞ்சல் வாக்குச் சீட்டுகள் முறையாக வைக்கப்பட்டுள்ளனவா? என்று சந்தேகம் எழுந்துள்ளதாக ஆட்சியரிடம் கூறியதற்கு, 'அங்கு கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டுள்ளது. தவறுகள் நடைபெற்றிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும், ’தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரை அதிமுக வேட்பாளர் தனியாகச் சந்தித்தது குறித்து எங்களுக்கும் தகவல் வந்துள்ளது. என்ன நடந்தது என்று விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் ஆட்சியர் கூறினார். எனவே, ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம்.

தேர்தல் தொடர்பான எந்தவொரு அறிவிப்பாக இருந்தாலும் வேட்பாளர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக அழைத்துக் கூட்டம் நடத்துவது வழக்கம். எனவே, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரை, அமைச்சர் எதற்காக தனியாகச் சந்தித்து அரை மணி நேரம் பேசினார் என்று தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும்".

இவ்வாறு இனிகோ இருதயராஜ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x