கன்னியாகுமரி தொகுதி தபால் வாக்கு முறைகேடு புகார்; நாளை மறுநாள் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
Updated on
1 min read

கன்னியாகுமரி தொகுதி தபால் வாக்கு முறைகேடு தொடர்பாக, நாளை மறுநாள் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கான தபால் வாக்குகளில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அங்கு மறு தபால் வாக்கு தேர்தல் நடத்த வேண்டி கோரி, கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், "கன்னியாகுமரி தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் தபால் ஓட்டுகள் மொத்தமாக 1,833 உள்ளன. இவற்றில் 1,761 தபால் ஓட்டுகள் பதியப்பட்டுள்ளதாகத் தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

ஆனால், இந்த ஓட்டுகள் தேர்தல் விதிமுறைகளின்படி பதிவு செய்யப்படவில்லை. தபால் வாக்குகளில் முறைகேடு நடைபெற்றுள்ளது. மேலும், 80 வயது முதியோரிடம் தபால் ஓட்டுகளைத் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வெளிப்படையாக வாங்கிச் சென்றுள்ளனர். அப்படி வாங்கும் தபால் ஓட்டுகளை அங்கேயே கையெழுத்திட்டு மடித்து வைக்காமல் தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று கையெழுத்திட்டு மடித்து சீல் வைத்துள்ளனர்.

எனவே, இந்த தபால் ஓட்டுகளை செல்லா ஓட்டாக மாற்றவும், குறிப்பிட்ட நபருக்கு ஓட்டு அளிக்கவும் வாய்ப்புள்ளது. தபால் வாக்குகளில் முறைகேடு குறித்து மாவட்டத் தேர்தல் அலுவலரிடம் பல முறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு இன்று (ஏப். 28) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பாக மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, இந்த மனு தொடர்பாக வரும் 30-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in