Published : 28 Apr 2021 03:13 AM
Last Updated : 28 Apr 2021 03:13 AM

வாக்கு எண்ணும் மையங்களில் காவல் அதிகாரிகள் ஆய்வு: திட்டமிட்டபடி மே 2-ல் வாக்கு எண்ணிக்கை என சத்யபிரத சாஹு உறுதி

சென்னை

வாக்கு எண்ணும் மையங்களில் அந்தந்த பகுதி காவல் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் கடந்த 6-ம் தேதி நடந்தது. தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள்75 இடங்களில் எண்ணப்படுகின்றன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் நேரில் சென்று பார்வையிடலாம். இதற்காக தேர்தல் ஆணையம் தனியாக அடையாள அட்டையையும் அவர்களுக்கு கொடுத்துள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்புக்கு நிற்கும் போலீஸாரிடம் இதை காண்பித்து, உள்ளே சென்று பார்வையிடலாம். இதனால் வேட்பாளர்களின் முகவர்கள் மட்டும் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அடிக்கடி சென்று வருகின்றனர். போலீஸாரும் ஷிப்ட் முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

கிருஷ்ணகிரியில் வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் இருந்த தீயணைப்பு வீரர் கரோனா தொற்றால் மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்கள் கட்டாயமாக கரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று காவல் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக நேற்று வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட எஸ்.பி.க்கள் மற்றும்டிஎஸ்பிக்கள், உதவி ஆணையர்கள் ஆய்வு செய்தனர்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாருக்கு பாதுகாப்பு மற்றும் கரோனா கட்டுப்பாடுகள் குறித்து பல ஆலோசனைகளை வழங்கினர்.

இதற்கிடையில், வாக்கு எண்ணிக்கை குறித்து தமிழக தலைமைதேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுகூறியபோது, ‘‘வாக்கு எண்ணிக்கைதிட்டமிட்டபடி மே 2-ம் தேதி நடைபெறும். தள்ளிப்போக வாய்ப்பு இல்லை. அதுகுறித்து ஆலோசிக்கவும் இல்லை. தேர்தல் வெற்றிக்கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது உட்பட தேர்தல்ஆணையத்தின் அறிவுறுத்தல்களை கடைபிடிக்க அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்படும். மே 2-ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்துதலைமைச் செயலர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடந்து வருகிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x