Published : 28 Apr 2021 03:13 AM
Last Updated : 28 Apr 2021 03:13 AM

ஆந்திராவில் கஞ்சா கடத்தல் கும்பல் அட்டூழியம் சென்னை போலீஸார் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு: காவல் உதவி ஆய்வாளர் உட்பட 2 போலீஸார் காயம்

ஆந்திராவில் பதுங்கி இருந்த கஞ்சா கும்பலை பிடிக்க முயன்ற சென்னை தனிப்படை போலீஸார் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் காவல் உதவி ஆய்வாளர் உட்பட 2 போலீஸார் காயம் அடைந்துள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிக அளவில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சென்னை பெருநகரில் `போதை தடுப்புக்கான நடவடிக்கை' மூலம் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தனிப்படை அமைத்துள்ளார்.

ரகசிய தகவல்

இந்நிலையில், ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கும்பல் ஒன்று கஞ்சா கடத்தி வருவதாக மதுரவாயல் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து கும்பலை பிடிக்க காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுதாகர், காவலர்கள் வெயில்முத்து, மிதுலன் மற்றும் ஊர்காவல் படை வீரர்கள் தீபக், மணிகண்டன், சுமன் ஆகியோரைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்தத் தனிப்படை போலீஸார், உயர் அதிகாரிகள் மற்றும் ஆந்திர மாநில போலீஸாருக்கு தகவல் தெரிவிக்காமல் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் தடா பகுதிக்குச் சென்றனர்.

பாதுகாப்புக்காக துப்பாக்கிகளையும் கொண்டு சென்றனர். கும்பல் பதுங்கி இருந்த வீட்டை அடையாளம் கண்டு சுற்றிவளைத்தனர். இதைக் கண்ட கும்பல் போலீஸார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. அவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. மேலும் அதிக அளவில் புகையும் கிளம்பியது. இரும்பு கம்பி போன்ற பயங்கர ஆயுதங்களாலும் போலீஸாரை தாக்கிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.

இந்த தாக்குதலில் உதவி ஆய்வாளர் சுதாகர், முதல் நிலைகாவலர் வெயில்முத்து மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் காயம் அடைந்து நிலை குலைந்தனர்.

இந்த சம்பவத்தில் கஞ்சா கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட ஹரி என்பவர் தப்பினார். இருப்பினும் ஹரியின் கூட்டாளியான வண்டலூரைச் சேர்ந்த நரேஷ், டில்லி, ஆந்திராவைச் சேர்ந்த முரளி ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். காயம் அடைந்த உதவி ஆய்வாளர் உட்பட 2 போலீஸாரும் மதுரவாயல் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கும்பல் பதுங்கி இருந்த வீட்டிலிருந்து ஏராளமான கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கும்பல் கஞ்சாவை பொட்டலமாக பிரித்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

காவல் ஆணையர் உத்தரவு

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘தனிப்படை போலீஸார் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் கும்பலை பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது, நாட்டு வெடிகுண்டுகளை வீசியதில் உதவி ஆய்வாளருக்கு காது கேட்கும் திறன் குறைந்துள்ளது. முதல்நிலை காவலர் வெயில்முத்துவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தேடி வருகிறோம்’ என்றனர். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x