Published : 28 Apr 2021 03:13 AM
Last Updated : 28 Apr 2021 03:13 AM

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் காவலர்களிடம் நலம் விசாரித்த காவல் ஆணையர்

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் நேற்று நலம் விசாரித்தார்.

கரோனா தொற்று பரவல் தடுப்பு பணியில் காவல் துறையினரும் முன்கள வீரர்களாக ஈடுபட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க கரோனா தொற்றால் பாதிக்கப்படும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து சென்னை பெருநகர காவல் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி இணைந்து அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஏசி டெக், நியூ பிளாக் விடுதி, கரோனா தொற்றால் பாதிப்படைந்த காவல்துறையினர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு சிசிச்சையளிக்கும் மையமாக ( கோவிட்-19 கேர் சென்டர்) மாற்றப்பட்டுள்ளது.

இந்த காவலர் சிசிச்சை மையத்தில் 360 படுக்கை வசதிகளுடன் 24 மணி நேர மருத்துவர்கள் பராமரிப்பு உடன் ஆம்புலன்ஸ் வசதி, இலவச தரமான உணவு, மருந்துகள் வழங்கப்படுகிறது. காவலர் மற்றும் காவலர் குடும்பத்தினர் சிகிச்சை பெற்று வரும் கோவிட்-19 கேர் சென்டருக்கு சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் நேற்று நேரில் சென்று, கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான 39 போலீஸார் மற்றும் காவலர்கள் குடும்பத்தினரிடம் காணொலி காட்சி மூலமும் மற்றும் சமூக இடைவெளியுடன் நேரடியாக உரையாடி நலம் விசாரித்தார். அவர்கள் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகளை தெரிவித்தார்.

இந்நிகழ்வில், கூடுதல் காவல்ஆணையர்கள் என்.கண்ணன், இணை ஆணையாளர் வி.பாலகிருஷ்ணன், மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் மீனா உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x