Published : 27 Apr 2021 04:57 PM
Last Updated : 27 Apr 2021 04:57 PM

கழிப்பறை மேற்கூரை இடிந்து விழுந்து கொத்தனார் பலி: ரூ.27 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

பேருந்து நிலையக் கழிப்பறையின் கூரை இடிந்து பலியான தொழிலாளியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க முடியாது என்ற அரசின் வாதத்தை நிராகரித்து, தொழிலாளி குடும்பத்திற்கு ரூ.27 லட்சம் இழப்பீடு வழங்க பல்லடம் நகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி இரவில் மழை பெய்துகொண்டிருந்த நிலையில், பல்லடம் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைக்குச் சென்ற அசோக்குமார் என்பவர் மீது மேற்கூரை இடிந்து விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

பேருந்து நிலையக் கழிப்பறையின் மேற்கூரை இடிந்து விழுந்து கட்டிடத் தொழிலாளி அசோக்குமார் பலியானதற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு கோரி, உயிரிழந்த தொழிலாளியின் மனைவி சரஸ்வதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அதில், நகராட்சி நிர்வாகம் கழிப்பறையை முறையாகப் பராமரிக்காததே கணவரின் மரணத்திற்குக் காரணம் என்றும், கொத்தனார் வேலை செய்த வந்த அவரின் மரணத்திற்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடுமாறும் கோரினார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் எம்.புருஷோத்தமன், தமிழக அரசு, திருப்பூர் ஆட்சியர், பல்லடம் நகராட்சி ஆகியோர் தரப்பில் எஸ்.கமலேஷ் கண்ணன், பி.ஆனந்த், ஏ.எஸ்.தம்புசாமி, பாலரமேஷ் ஆகியோர் ஆஜரானார்கள்.

கட்டிடம் கட்டப்பட்டு 30 ஆண்டுகள் ஆனாலும், உறுதியாக இருப்பதாக அதை ஆய்வு செய்த அதிகாரிகள் அறிக்கை அளித்து இருப்பதால், மேற்கூரை இடிந்து விழுந்ததற்கு நகராட்சி பொறுப்பாகாது என்று தமிழக அரசு மற்றும் பல்லடம் நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், கட்டிடத் தொழிலாளி அசோக்குமாரின் மரணத்திற்கு நகராட்சி அதிகாரிகளின் கவனக்குறைவே காரணம் என்பதைச் சுட்டிக்காட்டி, அவரது மரணத்திற்கு இழப்பீடு வழங்க பல்லடம் நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டனர்.

அதன்படி 27 லட்ச ரூபாய் இழப்பீட்டை நிர்ணயித்த நீதிபதிகள், அதில் 10 லட்ச ரூபாயை மனைவி சரஸ்வதிக்கும், தலா 5 லட்ச ரூபாயை இரு மகள்கள் மற்றும் மகனுக்கும், 2 லட்ச ரூபாயை அசோக்குமாரின் தாயாருக்கும் 8 வாரத்திற்குள் வழங்க வேண்டுமென பல்லடம் நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இழப்பீடு வழங்கப்பட்டது தொடர்பான அறிக்கையை ஜூன் 21-ம் தேதி தாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். உலகில் மழையின்றி உயிர் வாழ முடியாது என்றாலும், விலை மதிப்பில்லாத ஒரு உயிர் மழையால் பறிபோயுள்ளதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x