Published : 27 Apr 2021 12:29 PM
Last Updated : 27 Apr 2021 12:29 PM

தேசிய நெடுஞ்சாலையில் தேவையற்ற சாலைத் தடுப்பால் விபத்து: அரசு, டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உரிய விதிகளைப் பின்பற்றி தடுப்புகளை ஏற்படுத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கும், தமிழக அரசுக்கும், டிஜிபிக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியத்தைச் சேர்ந்த சுரேஷ் மணிவண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், “சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளுக்கு இடையில் காவல்துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.

வாகனங்கள் அதிவேகமாக வருவதைத் தடுக்கும் வகையில் இந்தத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளபோதும், அதன் மீது பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள் எதுவும் ஒட்டப்படவில்லை. 100 மீட்டர் தொலைவுக்கு முன்பு தடுப்புகள் உள்ளதாக எச்சரிக்கை செய்யும் பதாகைகள் இல்லை.

தேசிய நெடுஞ்சாலைகள் சட்ட விதிகளின்படி, தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புகளை அமைக்கக் கூடாது. எச்சரிக்கை பதாகைகளும், பிரதிபலிப்பு ஸ்டிக்கர்களும் இல்லாததால் வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. இந்தத் தடுப்புகளுக்கு 100 மீட்டர் தொலைவில் முன்தடுப்புகள் குறித்த எச்சரிக்கை பதாகைகள் அமைக்கப்பட வேண்டும். பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள் ஒட்ட உத்தரவிட வேண்டும்” எனக் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், தமிழக அரசு, டிஜிபிக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதத்துக்குத் தள்ளிவைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x