Published : 27 Apr 2021 12:17 PM
Last Updated : 27 Apr 2021 12:17 PM

ஊரடங்கால் பாதிக்கப்படும் தனியார் நிறுவன ஊழியர்கள்; இழந்த ஊதியப் பிரச்சினையைத் தீர்க்க நிபுணர் குழு: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

ஊரடங்கால் தனியார் நிறுவன ஊழியர்கள் இழந்த ஊதியத்தை ஈடுசெய்யும் வகையில், பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை வகுக்க, உயர்மட்டக் குழுவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையைப் பரிசீலிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கால் தனியார் நிறுவன ஊழியர்கள் இழந்த ஊதியத்தை ஈடுசெய்யும் வகையில், பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை வகுக்க, உயர்மட்டக் குழுவை அமைக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.

சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த காளிமுத்து மயிலவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “கரோனா பரவலைத் தடுக்க 2020ஆம் ஆண்டு மத்திய, மாநில அரசுகள் அறிவித்த ஊரடங்கு காலத்தில், தினக்கூலிகள், தனியார் நிறுவன ஊழியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு முழுமையான ஊதியம் வழங்கப்படவில்லை. அமெரிக்காவைப் போல தனியார் நிறுவன ஊழியர்களுக்கு எனப் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது இரண்டாவது அலை பரவலைக் கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கைத் தமிழக அரசு அறிவித்துள்ளதால் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இது ஊழியர்களின் ஊதியத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும்.

தனியார் நிறுவனங்களுக்கு வங்கிகள் அளித்துள்ள சலுகைகள், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதை உறுதி செய்யவில்லை என்பதால், ஊரடங்கால் தனியார் நிறுவன ஊழியர்கள் இழந்த ஊதியத்தை ஈடுசெய்யும் வகையில், பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை வகுக்க, உயர்மட்டக் குழுவை அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுதாரர் கோரும் உத்தரவை பிறப்பிக்க இயலாது எனக் கூறி, இது சம்பந்தமாக மனுதாரர் அளித்த கோரிக்கை மனுவைப் பரிசீலித்து, முடிவெடுத்து 12 வாரங்களில் மனுதாரருக்குத் தெரிவிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x