Published : 27 Apr 2021 06:30 AM
Last Updated : 27 Apr 2021 06:30 AM

புதிய கட்டுப்பாடுகள் அமல் எதிரொலியாக கோயில்களுக்கு வெளியே நின்று வழிபாடு செய்த பக்தர்கள்: பல்வேறு தொழில்களும் பாதிப்பால் தொழிலாளர்கள் வேலை இழப்பு

திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயில் பிரதான வாயில் மூடப்பட்டிருந்தது. படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி/ தென்காசி/ தூத்துக்குடி/ நாகர்கோவில்

தமிழக அரசு அறிவித்த பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் வெளியே நின்று வழிபாடு செய்தனர். புதிய கட்டுப்பாடுகளால் பல்வேறு தரப்பினரும் தொழில்கள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.

தமிழகத்தில் கரோனா பரவல் இரண்டாம் அலை தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது. அதன்படி, கடந்த 20-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தன.

திரையரங்குகள் மூடல்

அதன்படி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், மதுக்கூடங்கள், கூட்ட அரங்குகள், பெரிய கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டன.

மதுக்கடைகள் வழக்கம்போல் இயங்கின. மதுக்கூடங்கள் மூடப்பட்டதால் மது வாங்கிய பலர் திறந்தவெளியில் நின்று மதுபானத்தை அருந்திச் சென்றனர்.

திருநெல்வேலி மாநகராட்சி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் நகராட்சிகள், தென்காசி, செங்கோட்டை, புளியங்குடி, கடையநல்லூர், சங்கரன் கோவில் ஆகிய நகராட்சிப் பகுதிகளில் உள்ள அழகு நிலையங்கள், சலூன்கள் மூடப்பட்டன. கிராமப்பகுதிகள், பேரூராட்சிப் பகுதிகளில் வழக்கம்போல் சலூன் கடைகள் செயல்பட்டன.

உணவகங்கள், தேனீர் கடைகளில்பார்சல் வழங்க மட்டும் அனுமதிக்கப்பட்டது. அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படவில்லை. இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக உணவக உரிமையாளர்கள் கூறினர். வழிபாட்டு தலங்களில்பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் கோயிலுக்கு வெளியே நின்று வழிபாடு செய்தனர்.

கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் நாட்டுப்புற கிராமியக் கலைஞர்கள், பந்தல் தொழிலாளர்கள், சலூன் கடைக்காரர்கள், உணவகம் மற்றும் தேனீர் கடைக்காரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு ஊரடங்கால் வாழ்வாதாதம் பாதிக்கப்பட்டு, மெல்ல இயல்புநிலை திரும்பிய நிலையில், மீண்டும் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனைப்படுகின்றனர்.

ஊதியம் வழங்க முடியவில்லை

இதுகுறித்து உணவக உரிமையாளர்கள் கூறும்போது, “பார்சல்கள் மட்டுமே வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் 50 சதவீத தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க முடியவில்லை.

உணவகத்தில் அமர்ந்து உணவு அருந்ததடை செய்யப்பட்டுள்ளதால் வழக்கத்தை விட 50 சதவீதம் குறைவாகவே உணவுப் பொருட்களை தயார் செய்தோம். ஆனால், அது கூட விற்பனையாகவில்லை. இருக்கும் ஊழியர்களுக்குக் கூட சம்பளம் கொடுக்க முடியாத நிலை உள்ளது.

இதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு கடை வாடகை, மின் கட்டணம், போன்றவற்றைக் கூட வழங்க முடியாத நிலை உள்ளது. தேனீர் பார்சல் வாங்குவது அரிதாகவே இருக்கும். தேனீர் விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடையை திறந்து வியாபாரம் செய்வதால்நஷ்டமே ஏற்படும். இதனால் தொடர்ந்து கடையை நடத்துவதா அல்லது மூடிவிடுவதா என்று தெரியாமல் உள்ளோம்” என்றனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், சலூன்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. பேருந்துகள் வழக்கம்போல ஓடின. ஆனால் பயணிகள் கூட்டம்குறைவாக இருந்தது.கோயில்கள் அனைத்திலும் ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெற்றாலும், நடைகள் அடைக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. டீக்கடைகளில் பார்சல் மட்டும் வழங்கப்பட்டது. திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் அதிக கூட்டமின்றி எளிமையாக நடைபெற்றன.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சினிமா தியேட்டர்கள், பெரிய வணிகவளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள்,மதுபான கூடங்கள் மூடப்பட்டன. ஹோட்டல்களில் பார்சல் மட்டுமே கொடுக்கப்பட்டன. டீக்கடைகளிலும் உட்கார்ந்து டீ குடிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. கோயில்களுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

பக்தர்கள் இன்றி அனைத்து பூஜைகளும் நடத்தப்பட்டன. திருச்செந்தூரில் ஏராளமானோர் கோயிலுக்கு வெளியே நின்று வழிபாடு நடத்திவிட்டு சென்றனர். அனைத்து வழிபாட்டு தலங்களும் வெறிச்சோடி காணப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x