Published : 27 Apr 2021 06:13 AM
Last Updated : 27 Apr 2021 06:13 AM

நடிகர் விவேக் உயிரிழப்புக்கு பிறகு சென்னையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வோர் எண்ணிக்கை சரிவு: அச்சமின்றி நம்பிக்கையுடன் தடுப்பூசி போட்டுக் கொள்ள வல்லுநர்கள் அறிவுரை 

சென்னை 

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் விவேக் மாரடைப்பால் மரணமடைந்த பிறகு சென்னையில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வோர் எண்ணிக்கை சரிவடைந்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் அச்சமின்றி நம்பிக்கையுடன் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு சுகாதார வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சென்னையில் 2-ம் அலை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது 31 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். 2-ம் அலையில் மாநகராட்சி நிர்வாகம் தடுப்பூசியை பெரும் வரப்பிரசாதமாகக் கருதி, பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கிடையே நம்பிக்கையுடன் தடுப்பூசி போட்டுக் கொள்ள வருமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து, நடிகர் விவேக் தனது குழுவினருடன் அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் கடந்த 15-ம் தேதி தடுப்பூசி போட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து 16-ம் தேதி இதுவரை இல்லாத அளவாக சென்னையில் ஒரே நாளில் 49 ஆயிரத்து 10 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அதே நாளில் மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி கடந்த 17-ம் தேதி உயிரிழந்தார்.

இந்நிலையில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கும், விவேக் மரணத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. சுகாதாரத் துறைச் செயலர் மற்றும் பல்வேறு சுகாதார வல்லுநர்களும் தனியார் மருத்துவமனையில் விளக்கத்தை ஆமோதித்தன. இருப்பினும், அதைத் தொடர்ந்து வந்த நாட்களில் சென்னையில் தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கை சரிந்து வந்திருப்பது, பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி மீதான அச்சம் இன்னும் விலக
வில்லை என்பதையே காட்டுகிறது.

இதுகுறித்து கோவிட் நோய்க்கு எதிர்வினையாற்றும் இந்திய அறிவியலாளர்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த மருத்துவர் பரூக் அப்துல்லா கூறியதாவது:

உலகில் 130 நாடுகளில் இன்னும் ஒரு டோஸ் தடுப்பூசி கூட கிடைக்காமல், மக்கள் பிற நாடுகளை நம்பி வாழ்கிறார்கள். ஆனால் இந்தியாவில் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்றால் இலவசமாக தடுப்பூசி கிடைக்கிறது. இந்தியா தடுப்பூசி உற்பத்தியாளராகவும் உள்ளது. தடுப்பூசி குறித்து பல அவதூறுகள் பரப்பப்படுகின்றன.

தமிழகத்தில் ஏப்ரல் 25-ம் தேதி நிலவரப்படி 52 லட்சத்து 62 ஆயிரத்து 373 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இது தமிழக மக்கள் தொகையோடு ஒப்பிடும்போது சுமார் 9 சதவீதம். இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் அதிகம் வாழும் மாநிலங்
களில் 2-ம் இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் 11 சதவீதம் பேரும், 12.5 சதவீதம் பேரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்
ளனர். ஆனால் கேரளாவில் 26 சதவீதம் பேரும், தமிழகத்தில் 10 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் சுமார் 90 லட்சம் பேர் உள்ள நிலையில் 9 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

தடுப்பூசியானது தீவிர கரோனாவையும், மரணத்தையும் தடுக்கும் என ஆய்வுப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கடந்த ஜனவரியில் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. மார்ச் 31-ம் தேதி வரை நாடு முழுவதும் தடுப்பூசி போட்டுக் கொண்ட 6 லட்சத்து 30 ஆயிரம் பேரில், தடுப்பூசி போட்டுக் கொண்ட நாளில் இருந்து அடுத்த 28 நாட்களுக்குள் ஏற்பட்ட மரணங்கள் வெறும் 180 தான். அப்படி எனில், 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டால் 0.3 பேருக்கு மட்டுமே மரணம்
ஏற்படுகிறது.

தடுப்பூசி போட்டுக் கொள்வோர் 45 வயதுக்கு மேற்பட்டவர் என்பதால், அவரது இறப்புக்கு பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் காரண
மாக இருக்கலாம். அதே 1 லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் 1,250 மரணங்களை உருவாக்கும். தடுப்பூசி போடுவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பயன்களை ஒப்பிட்டால் பயன்களே அதிகம். 2-வது அலை தமிழகத்தில் அதிக மரணங்களை ஏற்படுத்துவதற்கு முன் பொதுமக்கள் அச்சமின்றி, நம்பிக்கையுடன் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையின் முன்னாள் ரத்தக் குழாய் நோய் மருத்துவர் ஜோ.அமலோர்ப்பவ நாதன் கூறியதாவது: இதய நோயாளிகளில் 25 சதவீதம் பேர் மருத்துவமனைக்கு வருவதற்குள்ளும், 25 சதவீதம் பேர் சிகிச்சை பெற்ற பின்பும் இறந்து போகிறார்கள். 50 சதவீதம் பேர் மட்டுமே பிழைக்கிறார்கள். விவேக் விவகாரத்திலும் அதுதான் நடந்தது. 59 வயதுடைய ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும் மாரடைப்பு வரலாம். தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் மரணம் அடைந்தது தற்செயலானது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் ரத்தம் உறைதல் ஒவ்வாமை ஐரோப்பிய நாடுகளில் 1 லட்சத்தில் ஒருவர், கிரேட் பிரிட்டனில் 25 ஆயிரம்
பேரில் ஒருவர், அமெரிக்காவில் 10 லட்சம் பேரில் ஒருவருக்கு இறப்பு ஏற்பட்டுள்ளது. ஊசி போட்ட பிறகு, உடலில் உருவாகும் ஆண்டிபாடி, உடலில் உள்ள தட்டணுக்களை உருவாக்கி, மூளையில் அடைப்பை ஏற்படுத்தியதால் அந்த இறப்புகள் ஏற்பட்டன. அதற்கு 10 நாட்கள் ஆகும். உடனே மரணம் ஏற்படாது. எனவே பொதுமக்கள் அச்சமின்றி தடுப்பூசியை போட்டுக் கொள்ள
லாம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x