Published : 26 Apr 2021 04:17 PM
Last Updated : 26 Apr 2021 04:17 PM

நீலகிரி அணைகள் நீர்மட்டம் சரிவு: மின் உற்பத்திக்கு சிக்கல்

அப்பர் பவானி அணை நீரின்றி குட்டையாக காட்சியளிக்கிறது.

நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் சரிந்துள்ளதால், கோடை காலத்தில் மின் உற்பத்திக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் மாயாறு மற்றும் பவானி ஆகிய இரு ஆறுகள் உள்ளன. இரு ஆறுகளும் பவானி சாகர் அணை அடைந்து, அங்கிருந்து பவானியாக பயணமாகிறது. பவானி ஆறு பவானி பாசன பகுதிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து, டெல்டா மாவட்டங்கள் வரை விரிவடைகிறது. மின் தேவைக்கும் இரு ஆறுகள் பயன்படுகின்றன.

கோடை காலங்களில் மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்கப் பெரும் உதவி புரிவது, நீலகிரி மாவட்டத்தில் உள்ள புனல் நீர்மின் நிலையங்கள். நீலகிரி மாவட்டத்தில் குந்தா, பைக்காரா புனல் நீர்மின் திட்டத்தின் கீழ் உள்ள 12 மின் நிலையங்கள் மூலம் 833.77 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுகிறது.

மாவட்டத்தில் பெரிய அணையாக கருதப்படும் அப்பர் பவானி அணையில் சேகரிக்கப்படும் தண்ணீர் ராட்சத குழாய் மூலம், அவலாஞ்சி, குந்தா, கெத்தை, பரளி மற்றும் பில்லூர் மின் நிலையம் வரை கொண்டு செல்லப்பட்டு, மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. இதனால் அப்பர் பவானி அணை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் அப்பர் பவானி அணையில் நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது. மொத்தக் கொள்ளவான 210 அடியில் தற்போது 90 அடி நீர் இருப்பு மட்டுமே உள்ளது.

தற்போது, கோடை காலத்தில் கடும் வெப்பம் காரணமாக மின் தேவை அதிகரித்துள்ளது. மின் உற்பத்திக்காக அணைகள் திறக்கப்பட்டதால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்தது.

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையில்லாமல் அணைகளில் நீர் இருப்பு வெகுவாகக் குறைந்துள்ளது.

உதகை நகருக்கு குடிநீர் விநியோகிக்கும் பார்சன்ஸ் வேலி அணையில் நீர் குறைந்துள்ளது.

அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால், கோடை காலத்தில் மின் உற்பத்திக்கு கடும் சிக்கல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், கோடை மழையை எதிர்பார்த்து மின்வாரியத்தினர் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, "மின் உற்பத்திக்கான அணைகளில் 40 சதவீதம் அளவுக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. கோடையைக் கருத்தில் கொண்டு, குந்தா, கெத்தை, மாயார் உட்பட்ட அணைகளில் முழு கொள்ளளவில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

தினசரி, 400 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றனர்.

இதனிடையே, உதகையில் உள்ள 36 வார்டுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் பார்சன்ஸ் வேலி அணையில் நீர்மட்டம் குறைந்து வருவதால், கோடை சீசனில் உதகைக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x