Published : 26 Apr 2021 02:55 PM
Last Updated : 26 Apr 2021 02:55 PM

திமுக ஆட்சி அமைந்த பிறகு எச்சூழலிலும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது: ஸ்டாலின் உறுதி

ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

திமுக ஆட்சி அமைந்த பிறகு ஸ்டெர்லைட் ஆலை எச்சூழலிலும் திறக்கப்படாது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று காலத்தில் தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் அவசரத் தேவையின் காரணமாக, ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிப்பது குறித்து முடிவெடுக்க இன்று (ஏப்.26) முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

ஆக்சிஜன் தயாரிப்புக்கு மட்டுமே அனுமதி, மின்சாரத்தைத் தமிழக அரசு மட்டுமே வழங்க வேண்டும், இதை வைத்து ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க நடவடிக்கை, எதிலும் ஸ்டெர்லைட் நிர்வாகம் செயல்பட அனுமதி வழங்கக் கூடாது, 4 மாதத்திற்கு மட்டுமே தற்காலிக அனுமதி, ஆக்சிஜன் மட்டுமே உற்பத்தி செய்து தமிழகப் பயன்பாட்டுக்குப் போக வெளி மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும் என, திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் தரப்பில் ஒருமித்த கருத்தாக வெளிப்பட்டது.

அனைத்துக் கட்சிகள் கருத்தை அரசு ஏற்கும் எனத் தெரிவித்த முதல்வர் பழனிசாமி, ஆக்சிஜன் உற்பத்திக்காக 4 மாதங்களுக்கு மட்டுமே அனுமதிக்கலாம், ஆக்சிஜன் உற்பத்தியை உள்ளூர் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழு அமைத்துக் கண்காணிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று தன் முகநூல் பக்கத்தில், "ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்குவது தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், திமுகவின் சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுகவின் மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இருவரும் பங்கேற்று, திமுகவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தனர்.

மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம், அதற்கான மின்சாரத்தை வழங்கலாம் என்று தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இம்முடிவு தற்காலிகமானதுதான்.

திமுக ஆட்சி அமைந்த பிறகும் நச்சு ஆலையான ஸ்டெர்லைட் எப்போதும் எந்தச் சூழலிலும் திறக்கப்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!" எனப் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x