Published : 26 Apr 2021 01:10 PM
Last Updated : 26 Apr 2021 01:10 PM

கரோனா தடுப்பு நடவடிக்கை இல்லாவிட்டால் வாக்கு எண்ணிக்கைக்குத் தடை: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை

தேர்தல் பிரச்சாரம் நடத்தும் போதெல்லாம், வேற்று கிரகத்தில் இருந்தீர்களா? தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றம் சுமத்தினாலும் தவறில்லை. முறையான பாதுகாப்பு ஏற்பாடு இல்லாவிட்டால் வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்க நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றும் வகையில் தேவையான ஏற்பாடுகளைச் செய்யக் கோரி தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சரும், அதிமுக வேட்பாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி நடந்தது. 234 தொகுதிகளில் பதிவான வாக்குகள் தமிழகத்தில் 75 வாக்கு எண்ணும் மையங்களில் ஸ்ட்ராங் ரூமில் மூன்றடுக்குக் காவலில் பாதுக்காப்பாக உள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட உள்ளன.

தமிழகத்தில் உள்ள விஐபி தொகுதிகளில் முக்கியமானது கரூர் தொகுதியாகும். இங்கு முன்னாள் இந்நாள் போக்குவரத்து அமைச்சர்கள் திமுக, அதிமுக சார்பில் மோதுகின்றனர். இதுதவிர அதிக அளவில் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியாகவும் கரூர் உள்ளது. இங்கு 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதனால் மேஜைகளை அதிகப்படுத்தி ஒரே கட்டமாக வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி சமீபத்தில் கோரிக்கை வைத்திருந்தார். கரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக வாக்கு எண்ணும் மையங்களில் கூட்டம் சேராவண்ணம் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனத் தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கரூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றும் வகையில் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிடக் கோரி, தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சரும், கரூர் தொகுதி அதிமுக வேட்பாளருமான விஜயபாஸ்கர், சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.

“வாக்கு எண்ணிக்கையை மூன்று அறைகளில் நடத்த வேண்டும். குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் முகவர்களை அனுமதிக்க வேண்டும். மருத்துவக் குழுவைப் பணியமர்த்த வேண்டும். கிருமிநாசினி வைக்க வேண்டும். முகக் கவசம் அணியாதவர்களை அனுமதிக்கக் கூடாது எனக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை. எனவே, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 4900 சதுர அடி மற்றும் 3400 சதுர அடி என இரண்டு அறைகள் கரூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இரண்டு சுயேச்சைகளின் ஏஜெண்டுகளைத் தவிர வேறு யாரையும் அனுப்பப் போவதில்லை என்றும், 9 அரசியல் கட்சிகளில் 7 அரசியல் கட்சிகள் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பும் என்றும் தெரிவித்தார். மேலும், வாக்கு எண்ணிக்கைக்காக ஆறு கூடுதல் மேஜைகள் போடப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வாக்குப்பதிவு நாளன்று கட்டுப்பாடுகள் முறையாகப் பின்பற்றப்பட்டதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்தபோது, பிரச்சாரம் தொடங்கிய நாட்களிலிருந்து வேற்று கிரகத்தில் இருந்தீர்களா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அரசியல் கட்சிகளும் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக நீதிபதிகள் குற்றம் சாட்டினர்.

தேர்தல் ஆணையத்தின் விளக்கத்திற்குப் பிறகு தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலையின் தற்போதைய நிலைக்குத் தேர்தல் ஆணையம்தான் காரணம் எனக் கண்டனம் தெரிவித்ததுடன், வாக்கு எண்ணிக்கையின்போது தடுப்பு விதிகளைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டும் அதை நடைமுறைப்படுத்தவில்லை எனத் தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

கடந்த சில மாதங்களாகவே பொறுப்பற்ற முறையில் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வந்ததாகவும், கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாத அரசியல் கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்காகத் தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தினாலும் தவறில்லை என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் கிருமிநாசினி தெளித்தல், தனி மனித இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடி வாக்கு எண்ணும் மையங்களில் இந்த நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இது தொடர்பாக சுகாதாரத் துறைச் செயலாளர், பொது சுகாதார இயக்குனருடன் கலந்தாலோசித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏப்ரல் 30ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

அன்றைய தினம் இது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை புளூ பிரிண்ட்டாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தடுப்பு நடவடிக்கைகள் முறையாக இல்லாவிட்டால் வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்க நேரிடும் எனவும் எச்சரித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x